Monday, April 30, 2012

குறுங்கதைகள்... (தொகுதி #01)



ஒரு முழு புத்தகமாய் நாவல்....

சில பக்கங்களில் சிறுகதை

ஒரு பக்கத்தில் ஒரு கதை...

இப்படி எத்தனையோ விதமாக கதைகளை நாம் படித்து ரசித்து வருகிறோம்... 'சில விநாடிக்கதை' என்று ஒரு வடிவம் இருந்தால் எப்படி இருக்கும்... இதை யோசித்துப் பார்க்கும்போது சில நாட்களுக்கு முன்பு ஏதோ ஒரு வார இதழில் 'போஸ்ட் கார்டு கதைகள்' என்று ஒரு போட்டி வைத்திருந்தார்கள். அதில் வெற்றிபெற்ற கதைகள் பிரசுரமாகியிருந்தது... இன்று போஸ்ட் கார்டு செய்யும் வேலையை SMSகள் செய்து வருவதால்... SMS கதைகள் என்று ஒரு வடிவம் இருந்தால் எப்படி இருக்கும்... என்று தோன்றியது...

இன்று SMSகளில் எத்தனையோ வகையான விஷயங்கள் பகிரப்படுகிறது... சேட்டிங்... டேட்டிங், க்ரீட்டிங்ஸ்... ரெயில்வே, சினிமா, ஃப்ளைட் டிக்கெட் இப்படி பல... இதில் கதையும் வர ஆரம்பித்தால் எப்படி இருக்கும் என்று தோன்றவே... இணையத்தில் உள்ள பிரபல SMS சிலவற்றை தேடிப்பார்த்தேன்... அதில் ஏற்கனவே SMSகளில் சில குறுங்கதைகள் நகைச்சுவையுணர்வுடன் வந்துள்ளதை தெரிந்துக் கொண்டேன்... அவைகளை கீழே பகிர்ந்துள்ளேன்...

ஒரு கட்டுரையில் சுஜாதா அவர்கள் உலகின் மிகச்சிறிய திகில் கதை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்... அது  Fredric Brown என்பவரால் எழுதப்பட்ட 'Knock' என்ற சிறுகதை(?) 

-----------------------
Knock
The last man on Earth sat alone in a room. There was a knock on the door...
'உலகின் கடைசி மனிதன் தனியாக அறையில் அமர்ந்திருக்க... யாரோ கதவை தட்டினார்கள்...'
-----------------------

இந்தளவுக்கு சிறிய வடிவில் போதுமான கதை விவரங்களை கூற முடியாததால்... இதற்கு அடுத்த கட்டமான Flash Fiction என்ற categoryக்கு வருவோம்... இதற்கு ஏகப்பட்ட விதிமுறைகளை கூறுகிறார்கள்... சரியாக 55 வார்த்தைகள்... 300 வார்த்தைகள் என்று நிறைய விதிகள் உள்ளது... நாம் விதிகளை சற்றே புறந்தள்ளி... முடிந்தவரை சுருக்கி... முடிந்தவரை நீட்டி கதை சொல்லி முயற்சித்து பார்த்தோமானால்... இது போன்ற கதைகள் ஒரு SMSல் கச்சிதமாக பொருந்தக்கூடியவையாக உள்ளது... நான் இண்டர்நெட்டில் தேடியபோது கிடைத்த ஒரு சில குட்டிக்கதைகள்...
---------------

தூதன்...
மரணப்படுக்கையிலிருக்கும் சைனீஸ் நண்பரை பார்க்க இந்திய தூதுவர் மருத்துவமனைக்கு வருகிறார்...

அவரிடம் சைனீஸில் ஏதோ உரக்க சொல்ல பிரயத்தனப்பட்டு அந்த சைனீஸ் இறந்துவிடுகிறார்.

இறுதி ஊர்வலத்தில் அவர் சொன்ன சைனீஸ் வாக்கியத்தை அருகிலிருப்பவரிடம் மொழிப்பெயர்த்து சொல்லுமாறு இந்திய தூதுவர் விசாரிக்க...

அதன் அர்த்தம்...

'நீ என் ஆக்ஸிஜன் குழாய்ல நின்னுட்டிருக்கே...'
--------------

டெடி
காதலன் காதலிக்கு ஒரு 'டெட்டி பொம்மை' பரிசளித்தான்

'நான் கேட்டது வெட்டிங் ரிங்தானே... இது எதற்கு..' என்று அந்த பொம்மையை தூக்கியெறிந்தாள்.

அதை எடுக்க போகும்போது சாலையில் அடிப்பட்டு காதலன் இறக்கிறான்

அந்த பொம்மையை கட்டிக்கொண்டு காதலி அழ... பொம்மையிலிருந்து ரெக்கார்ட் செய்யப்பட்ட பாட்டு ஒலித்தது...

I LOVE YOU... HERE IS THE WEDDING RING IN MY POCKET என்று திரும்ப திரும்ப பாடியது
--------------

கண்ணம்மா...
ஒரு இளைஞனும் ஒரு குருட்டுப் பெண்ணும் இணைபிரியா காதலர்கள்...

பெண்ணுக்கு யாரோ கண்தானம் செய்ய... பார்வை பெறுகிறாள்

அடுத்த நாள் காதலனைப் பார்க்க... அவன் குருடன் என்று தெரிய வருகிறது...

அவனது காதலை மறுக்கிறாள். கடிதம் எழுதிவைத்துவிட்டு காதலன் சென்றுவிடுகிறான்.

கடிதத்தில் 'என் கண்களை பத்திரமாக பார்த்துக்கொள்' என்று கிறுக்கலாய்...

--------------

இது போன்ற குறுங்கதைகளை, கதை என்று சொல்ல முடியாவிட்டாலும், நிச்சயம் ஒரு குட்டி சீக்வென்ஸ்-க்கு உண்டான அத்தனை தகுதிகளும் கொண்டிருக்கிறது என்றே நினைக்கிறேன். கதை எழுத ஆர்வமுள்ளவர்கள் இது போல் ரெகுலராக எழுதிப் பழகினால் நன்றாகவே இருக்கும் என்று தோன்றுகிறது... இதன் முக்கிய அம்சம்... கடைசி வரியில்தான் கதை முழுதாய் புரிய வேண்டும்... கிட்டத்தட்ட ஹைக்கூ கவிதையைப் போல்..

ஃபிலிம் மேக்கிங் ஆர்வமுள்ளவர்கள்... இப்படிப்பட்ட குட்டி கதைகைள மொபைலிலோ... அல்லது ஹேண்டிகேமிராவிலோ படம் பிடித்தும் பழகலாம்...

நான் எனது முதல் படமான 'ஓர் இரவு'-ன் விளம்பரத்திற்கு இப்படி ஒரு சின்ன SMS முயற்சி செய்திருந்தேன்... அதன் குறுங்கதை வடிவங்கள் இதோ...

--------------

திகில் புத்தகம்
மழையிரவில் ஒரு பழைய புத்தக கடையில் ஒருவர் நுழைந்தார்...
'நல்ல திகில் புத்தகம் இருக்கா..?' என்று கேட்க, கடைகாரர் ஒரு புத்தகத்தை எடுத்து கொடுத்தார்...
'இது நல்லா திகிலா இருக்குமா..?'
கடைகாரர் அவரை ஏற இறங்க பார்த்துவிட்டு
'நானே பல தடவ படிச்சிருக்கேன் சார்..' என்றார். ஆனால் வாடிக்கையாளர் இன்னும் நம்பிக்கை வராதவராய்... 'அப்படியா..? எத்தனை தடவை படிச்சிருக்கீங்க..?' என்று கேட்க
'சாகுறதுக்கு முன்னாடி 4 தடவை... செத்ததுக்கப்புறம் 7 தடவை...'
--------------

ராசியான டாக்டர்
ஒருவர் : நீங்கதான் எங்க கழக விழாவுக்கு இந்தமுறை சீஃப் கெஸ்ட்-ஆ வரணும்
டாக்டர் : அப்படியா.. நல்லது...
ஒருவர் : ஆமா சார்... எங்க கழக உறுப்பினர்களில் அதிகம் பேர் உங்களால வந்து சேர்ந்தவங்கதான் சார்.
டாக்டர் : அப்படியா...? ரொம்ப மகிழ்ச்சி.. உங்க கழகத்தின் பெயர்..?
ஒருவர் : ஆவிகள் முன்னேற்ற கழகம்...
--------------

எனது நண்பர் சொன்ன ஒரு சம்பவத்தை குறுங்கதையாக எழுதிப்பார்த்தேன்

பெஞ்சுமார்க்
ஜனரஞ்சகமான அந்த புறநகர் ஸ்டேஷனில் கூட்டம் வழிந்துக் கொண்டிருந்தது. ரயில் வர நேரமிருந்ததால் கால்கடுக்க நடந்து வந்த நான்... உட்கார இடம் தேடினேன்... எல்லா பெஞ்சும் ஹவுஸ் ஃபுல்

ஒரு பெஞ்சில் மட்டும் ஒரு நாய் தனியே படுத்திருந்தது... அருகில் நிறைய இடம் இருந்தது... உட்காரலாம் என்று சென்றால் மேலே ஒரு பலகை...

'இந்த பெஞ்சு... ரெயில்வே எம்ப்ளாயிசுக்கு மட்டும்'

நாய் என்னை முறைத்தது...
--------------

சிறுவயதில் நான் பார்த்த ஒரு உண்மை சம்பவத்தின் இன்னொரு குறுங்கதை வடிவம்...

வேடிக்கை
ரயிலுக்கு காத்திருந்தேன்.

எதிர் ஃபளாட்ஃபாரத்தில் ரயில் நுழைந்துக் கொண்டிருந்தது...

ஒரு ஆட்டுக்குட்டி தண்டவாளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்க... காப்பாற்ற நினைப்பதற்குள் அந்த ரயில் ஆட்டுக்குட்டியை பதம் பார்த்து நின்றது.

வெண்டார்ஸ் கம்பார்ட்மெண்டிலிருந்து ஒருவர் வெளியே தண்டவாளத்தில் குதித்தார்...

ஆட்டுக்குட்டியின் ஈரல் பாகம் தனியே விழுந்திருக்க அதை எடுத்து தனது பைக்குள் இருக்கும் டிஃபன் பாக்ஸில் வைத்துக் கொண்டு மீண்டும் ரயிலேறினார்...

ரயில் சங்கூதிக்கொண்டே கிளம்பியது...
--------------

அடுத்த ஒரு தொகுதியில் இன்னும் சில குறுங்கதைகளுடன் சந்திக்கிறேன்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்

Image Courtesy : http://www.ipernity.com


Signature

Tuesday, April 24, 2012

MicroFilms - "பேச்சி"



Written and Directed by : RAM
Camera : SUJITH SARANG
Music : JAKES BEJOY
Editing & Grading : SREEJITH SARANG
Running Time : 12:56

கோயம்புத்தூரிலுள்ள எனது நண்பர் வசந்த் (Vaz zy)... பதிவரும்கூட... அவ்வப்போது அசத்தலான சிறுகதைகளை போட்டு ஆச்சர்யப்படுத்துவார்.... சில நாட்களுக்கு முன்பு அவரது தளத்தில் 'பேச்சி' என்ற ஒரு சிறுகதையை போட்டிருந்தார். திகில் கதைகளுக்கே உரித்தான தன்மைகளுடன் கூடிய அக்கதை வித்தியாசமாகவும், நேர்த்தியாகவும் (பயமாகவும்தான்..!) இருந்தது.

அக்கதையை அடிப்படையாக கொண்டு சமீபத்தில் அவரது நண்பர்குழுவுடன் இணைந்து 'பேச்சி' என்று குறும்பட வடிவம் கொடுத்திருக்கிறார்கள். இயக்கியவர் 'ராம்'...

கதைச்சுருக்கம்
வெற்றி, மனோஜ் என்ற இரு நண்பர்கள்... லீவில் வெற்றியின் கிராமத்து பண்ணைவீட்டிலிருந்து ஊருக்கு திரும்பும் போது மலைப்பாதையில் நிகழும் ஒரு திகில் சம்பவமே கதை...

இயல்பான நடிப்பில் சலிப்பும் கோவமும் பயமும் அலட்சியமும் கலந்து சுகாஷ்-ன் நடிப்பு ரசிக்க வைக்கிறது. அதே போல் அவரது உடன் வரும் நண்பராய் மனோஜ்-ம் சரியாகவே செய்திருக்கிறார். நடுவில் ஒரு குருட்டுப் பெண்ணின் அண்ணனாய் வரும் கதாபாத்திரத்தின் இண்ட்ரோ கொஞ்சம் Cliche... அதை மட்டும் வேறுவிதமாய் காட்டியிருக்கலாமோ என்று தோன்றியது...

சுஜித் சாரங்கின் கேமிராவில், திகில் படத்திற்கு உண்டான எல்லாக் கோணங்களிலும் படம் மிளிர்கிறது. அதுவும் மலைப்பாதையில் நடக்கும் கதை என்பதால் அந்த திகிலான ட்ராவல் அனுபவம் பார்ப்பவரை தொற்றிக்கொள்ளும்படி கோணங்கள் வைத்திருப்பதும் பாராட்டுக்குறியது. அந்த காட்சிகளுக்கு ஏற்ற கிரேடிங்க-ஐ நேர்த்தியாய் கையாண்டிருப்பது ஸ்ரீஜித் சாரங்கின் கைவண்ணம்...

இக்குறும்படம் பார்ப்பதற்கு ஒரு நல்ல த்ரில்லர் திரைப்படத்திற்கான ஓப்பனிங் சீன் போன்ற இம்பாக்ட் ஏற்படுத்துவதை நிச்சயம் உணர முடியும்.

படிக்கும்போது என் அகக்கண்ணில் நான் பார்த்த வடிவத்தை புறக்கண்ணில் காணக்கிடைக்க வைத்த 'பேச்சி' குறும்பட குழுவினர்களுக்கு என் பாராட்டுக்கள்.

பேச்சி - ''மலைப்பாதை மர்மம்...''



போனஸ் செய்தி : இப்படத்தில் மந்திரவாதி ஒருவரை பற்றி சொல்லும்போது ஒருவர் திரையை உற்றுப்பார்த்துக்கொண்டு உறுமி அடித்துக் கொண்டிருப்பது போல் நடித்திருப்பார். அவர்தான் 'பேச்சி' சிறுகதை எழுதியவரும் எனது நண்பருமான 'வசந்த்' என்கிற Vaz zy... அவர் எழுதிய பேச்சி சிறுகதையை படிக்க இங்கே க்ளிக்கவும்... அந்த சிறுகதையில் இன்னும் பயங்கரமான க்ளைமேக்ஸ்...

உங்களுக்கு இப்படம் பிடித்திருந்தால்...
உங்கள் விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் வழக்கம்போல் வாரிவழங்கி... இக்குழுவினரை ஊக்குவிப்பதை நாம் இப்படத்தை பார்ப்பதற்கு வழங்கும் சன்மானமாய் நினைப்போம். நன்றி...!
-----------------------------------------------------------------

குறும்படத்திற்கு ஹாரர் அல்லது த்ரில்லர் ஜானர் வகை கதைகள் நல்லதொரு தேர்வு என்று நான் நினைக்கிறேன். காரணம், ஒரு முழு திரைப்படத்தின் தாக்கத்தை ஒரு சில நிமிடங்களில் ஏற்படுத்துவதற்கு த்ரில்லர் வகை கதைகள் நன்றாய் உதவும். மேலும் டெக்னிக்கல் விஷயங்களின் அதீத பங்களிப்புமிருப்பதால், ஒட்டுமொத்த குழுவினரின் நிபுணத்துவமும் பார்வையாளர்களுக்கு பரிச்சயப்படும். இது போல் உங்களுக்கு பிடித்த வித்தியாசமான குறும்படங்களையும் பரிந்துரை செய்யவும்.


Signature

Monday, April 23, 2012

அம்புலிக்கு நண்பர் கொடுத்த அவார்டு...

அம்புலி திரைப்படத்தின் இன்றைய 66ஆவது நாளில் நண்பர் ஒருவர் ஒரு குட்டி விருது கொடுத்துள்ளார். அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இன்று காலை ஃபேஸ்புக்கில் நண்பர் AG Sivakumar-ருடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு அவார்டு கொடுத்தார்... அது என்ன என்பதை கீழேயுள்ள உரையாடலில் நீங்களே தெரிந்துக் கொள்ளுங்கள்...

Ag Sivakumar : hi hareesh
---------------------------------
Haresh Narayan : Hi...
---------------------------------
Ag Sivakumar : i just want to share an incident that happened yesterday in escape cinemas
---------------------------------
Haresh Narayan : Yes pls...
---------------------------------
Ag Sivakumar : i went for mammootty's film cobra in escape.
---------------------------------
Haresh Narayan : Oh ok
---------------------------------
Ag Sivakumar : there i saw a kid with his parents near touch screen
ticket
---------------------------------
Haresh Narayan : Ok?
---------------------------------
Ag Sivakumar : his parents were keep on selecting the movie to go..john carter etc but the kid said "vendaam. vendaam. ambuli" but they did not listen the kid repeatedly said "naan dhaan solralla. ambulidhaan venum". i took a photo and will send it to your mail id imhareeshnarayan@gmail.com
---------------------------------
Haresh Narayan : Wow... So happy to hear it. Thanks to you for sharing...
---------------------------------
Ag Sivakumar : congrats for your team for making an impact on childrens.
---------------------------------
Haresh Narayan : I'm gonna share this ur very word in my blog
---------------------------------
Ag Sivakumar : ok. i will send the photo now.
---------------------------------
Haresh Narayan : Ya pls
---------------------------------
Ag Sivakumar : Mail has been sent
---------------------------------
Haresh Narayan : Thank You...
---------------------------------

இந்த உரையாடலை தொடர்ந்து அவர் அனுப்பிய இமெயில்...


வணக்கம் ஹரீஷ்,
நேற்று ஈஸ்கேப்பில் பெற்றோரிடம் அம்புலி பார்த்தே ஆக வேண்டும் என்று விடாமல் அடம் பிடித்த வாண்டின் படத்தை அட்டாச் செய்துள்ளேன். 
உங்கள் அணிக்கு வாழ்த்துகள்.
நன்றி,
சிவகுமார் 
madrasbhavan.com



நன்றி... அந்த பெயர் தெரியாத குழந்தைக்கும்... புகைப்படவிருது கொடுத்த நண்பர் AG Sivakumarருக்கும்...

நண்பர் சிவக்குமார் மெட்ராஸ்பவன் என்ற வலைத்தளத்தில் எண்ணங்களை எழுதும் பதிவர்... அம்புலி வெளியான முதல் வாரம் படத்தை பார்த்து, நண்பர் ரஹும் கஸாலி மூலமாய் எனது செல்ஃபோன் நம்பரை தேடிப்பிடித்து சுமார் ஒரு மணி நேரம் படத்தைப் பற்றி பேசி பாராட்டினார். அவரது அன்பிற்கு இந்த பதிவின் மூல(மு)ம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


Signature

Monday, April 16, 2012

MicroFilms - "துவந்த யுத்தம்"


குறும்படங்கள்... ஹைக்கூ கவிதைகளைப் போன்றது... எந்த வித வியாபார நோக்கமும் இல்லாமல் எடுக்கப்படும் மைக்ரோ கலைவடிவங்கள்.

அதிலும் கூடுதல் சிரத்தை, அதீத நிபுணத்துவம் எல்லாம் கலக்கும்போது திரைப்படங்களுக்கு சவால்விடும் வகையில் சில குறும்படங்கள் அமைந்துவிடுவது பேராச்சர்யம்.

அப்படிப்பட்ட குறும்படங்களில் எனது பார்வைக்குவந்த சில படங்களை உங்களுடன் "Microfilms" என்ற பெயரில் அவ்வப்போது பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இன்றைய படம்... 'துவந்த யுத்தம்...'




Mini Profile
Written and Directed by : Ashoke Kumar
Camera : K.G. Venkatesh
Music : Karthikeya Murthy
Editing : M. Bala
Art : Rajaram
Lyrics : Subasri Priya
Running Time : 13:58

எனது நண்பரும், லஷ்மி மூவி மேக்கர்ஸ் திரு. சுவாமிநாதன் அவர்களின் மகனுமான அஷோக் குமார் இயக்கிய படம்... எனக்கும் இவருக்கும் ஒரு சின்ன ஒற்றுமை... இவரும் என்னைப்போலவே ஐ.டி. துறையை துறந்து சினிமாவில் ஐக்கியமான துறவி...

இவர் எடுத்து முதல் குறும்படமான இந்த 'துவந்த யுத்தம்' படத்தை சில மாதங்களுக்கு முன்பு எனக்கும் எங்கள் குழுவினருக்கும் போட்டுக்காட்டினார்... இப்படத்தைப் பற்றிய எனது கருத்தை நீண்ட நாட்களாகவே வலைப்பதிவில் பகிர வேண்டும் என்று ஆவல் இருந்துவந்தது... தற்போது இப்படத்தை Youtubeல் இவர் வெளியிட்டிருப்பதால் இது தக்க சமயம் என்று கருதுகிறேன்.

எதைப்பற்றிய படம்..?

திரைப்படங்களில் சமுதாய பிரச்சினைக்கு தீர்வு காண விழையும் அல்லது அலசும் திரைப்படங்கள் அன்றாடம் பெருமளவில் வெற்றிப்பெறுவதுண்டு... லஞ்சம், ஊழல், அரசாங்க அலட்சியங்கள் போன்றவைகளை பேசும் அப்படிப்பட்ட படங்கள் மக்களின் மனதினுள் இருக்கும் ஆதங்கத்தை பகிர்ந்து... அதற்கான தீர்வை கதாநாயகன் வழங்குவது போல் காட்டப்படும்போது மக்களுக்கு அப்படத்தின்மீது அபிப்ராயம் ஏற்படும்.

ஆனால், 2.30 மணி நேரம் காட்டப்படும் திரைப்படத்தில் அது சாத்தியம்... ஆனால், சில நிமிடங்கள் மட்டுமே ஓடும் குறும்படங்களில் அத்தகைய சமுதாய உணர்வை தொட்டு அதில் வெற்றியும் பெறுவது என்பது பெரும்பாலும் சவாலான விஷயம்... அப்படிப்பட்ட சவாலான முயற்சியை எடுத்துக்கொண்டு அதில் வெற்றியும் விருதும் குவித்துள்ளார் இப்படத்தின் இயக்குனர் அஷோக் குமார். நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்.

இவரது உணர்வை உள்வாங்கி இவருடன் இணைந்து உழைத்து வெற்றிக்கனி கண்ட இவரது குழுவினர்கள் அனைவருக்கும் இதே பாராட்டுகள் தகும்.

குறும்படம் என்பதால் இதன் கதைச்சுருக்கத்தை நான் கூறத்தேவையில்லை என்று நினைக்கிறேன். கதைப்பதைவிட கண்ணால் கண்டு தெரிந்துக் கொள்வதே சாலச்சிறந்தது...

நடிகர்கள் அனைவவரும் இயல்பாய் நடித்து உணர்வை பகிர்ந்துள்ளனர்...

இசை கார்த்திகேய மூர்த்தி... தரமான இசை.... இவரது பின்னனி இசையும், End Credits பாடலும் இப்படத்திற்கு பெரிய பலம்... குறிப்பாக கடைசியில் வரும் பாடலும், அதில இடம்பெறும் சுபஸ்ரீப்ரியாவின்  வைட்டமின் வரிகளும்...படத்தை மனதில் பதிவு செய்வது நிச்சயம்...

உப்புக்காற்று ஓவியமாய் வெங்கடேஷின் ஒளிப்பதிவு... பாலாவின் படத்தொகுப்பு, ராஜாராமின் கலை... என்று இதில் பங்குபெறும் அத்தனை டெக்னீஷியன்களும் விரைவில் வெள்ளித்திரைக்கு வரத்தகுதிபெற்ற வித்தகர்கள்... நிச்சயம் வருவார்கள்... வாழ்த்துக்களுடன் வரவேற்போம்...

ஏற்கனவே உள்ளூரிலும், வெளியூரிலும் பல்வேறு விருதுகளயும் பத்திரிகைகளின் பாராட்டுக்களையும் குவித்துள்ள இப்படம்... இன்னமும் விருதுகளையும் பார்ப்பவர்கள் நெஞ்சையும் அள்ளும் என்பது திண்ணம்...

துவந்த யுத்தம் : "கால்மணிநேர கடற்காவியம்"

----------------------------------------------------------------------------------

உங்களுக்கு இப்படம் பிடித்திருந்தால்..!

வெளிநாடுகளில் இண்டிபெண்டன்ட் படங்களுக்கு Direct to DVD என்ற விசேஷ வியாபார உத்திகள் மூலம் தயாரிப்பு செலவை ஈட்டிவிடுவார்கள் (நல்ல லாபமும் உண்டு...) ஆனால், இங்கு எடுக்கப்படும் குறும்படங்களை வியாபார ரீதியாய் வெற்றிப்பெற வைக்க நம்மூரில் வழிமுறைகள் இல்லை (அல்லது மிகக்குறைவு) என்பது வருத்தத்திற்குறிய விஷயமே..!  எனவே, இலவசமாய் நாம் கண்டுகளிக்கும் குறும்படங்களுக்கு நம்மால் முடிந்த ஒன்றை செய்யலாம்... அப்படத்தைப் பற்றி ஒரிரு நண்பர்களிடமும், சமூக வலைதளங்களிலும் பகிரலாமே..!


Signature

Friday, April 13, 2012

IMPRESS ME... [சிறுகதை]






---------------------------------------------------------
“இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்…”
---------------------------------------------------------

டீயில் இனிப்பு ரொம்ப அதிகமாக இருந்தது...

'டீ ரொம்ப நல்லாயிருக்கு..' என்று டீயுறிஞ்சிய கண்ணன், தன் முகத்தை சாதாரணமாக வைத்துக் த்ரியாவை பார்த்து பொய் சொன்னான்

அவனருகில் அமர்ந்திருந்த அன்பு (கண்ணனின் நண்பன்) கண்ணனைப் பார்த்து முறைத்தான்.

அவன் முறைப்பின் அர்த்தம் இது டீயா..? பாயாசம்னு வேணும்னா சொல்லு... நல்ல டீய நீ சாப்டதே இல்லையா என்று கேட்பது போல் இருந்தது

த்ரியா கண்ணனின் பாராட்டை பெற்றுக்கொண்டு 'அது நான் வைக்கல... எங்கம்மா செஞ்சது..' என்று அம்மாவை கண்காட்ட... அவள் அம்மா அநியாயத்துக்கு வெட்கப்பட்டாள். கண்ணனும் அவளைப் பார்த்து சிரித்து வைத்தான்

'தம்பி எப்படி..? டீ காஃபி ரொம்ப விரும்பி சாப்பிடுவாரோ..' என்று த்ரியாவின் அப்பா கண்ணனை எடை போட முயன்று கொண்டிருந்தார்.

'அதிகமில்ல சார்... ரொம்ப லிமிட்டா சாப்பிடுவான். அதுவும் ப்ரெண்ட்ஸ்ங்க நாங்க ரொம்ப கம்பெல் பண்ணும்போது மட்டும் லைட்டா சாப்பிடுவான் அவ்ளோதான்..' என்று கண்ணனின் நண்பன் அன்பு உளறினான்

'டேய்... அவர் டீ சாப்பிடுறபத்தி கேட்கறாருடா... நீ வேற ஏதோ சொல்லிட்டிருக்கே' என்று முகத்தில் அவசரமாக புன்னகையை வரவழைத்துக்கொண்டு வருங்கால மாமனாரைப் பார்த்து அசடு வழிந்தான்.

பெண் பார்க்கும் படலம் கண்ணனுக்கு ரொம்ப புதிது... ஒரே சௌகரியம்.. த்ரியாவும் கண்ணனும் ஏற்கனவே காதலர்கள்... கண்ணன் வீட்டில் ஏற்கனவே சம்மதம்... த்ரியா வீட்டில்தான் இன்னும் இழுபறி... எனவே இன்று நடப்பது மாப்பிளையை மாமனார் பார்க்கும் படலம்... இன்றிவன் தேறிவிட்டால்... கல்யாணம் நிச்சயம்...

ஆனால் நிலைமை அவ்வளவு சாதகமாய் இல்லை... கண்ணன், என்ன செய்வதென்று தெரியாமல் திணறினான். யார் முகத்தை பார்த்தாலும் அவனை எடை போடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தனர்... யார் கண்ணையும் சந்திக்க தைரியமில்லாமல் டீ உறிஞ்சிக் கொண்டே அவர்கள் ஹாலில் இருக்கும் மீன் தொட்டியை பார்த்தான். அழகாக மீன்கள் கவலையில்லாமல் அங்குமிங்கும் பறப்பது போல் மிதந்துக் கொண்டிருந்தது... அக்காட்சி மனதை சற்றே லேசாக்கியது.

த்ரியா மிகவும் பதற்றமாய் இருந்தாள்...

தன்னைக்காட்டிலும் கண்ணனுக்கு அவள் முகம் பார்க்க கவலையாக இருந்தது... த்ரியாவை நிதமும் சந்தோஷமாய் பார்க்க நினைத்தவன், இன்று தன்னால் அவள் முகம் வாடிப்போயிருப்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை...

இன்று என்ன நடக்குமோ என்று இருவரின் மனமும் போராடிக் கொண்டிருந்தன...

அங்கிருந்த மௌனத்தை அவன் நண்பன் அன்பு உடைத்தான்

'சார், வரப்போற ‘அப்ரெய்சல்’லருந்து கண்ணன் ரேஞ்சே தனி... கண்டிப்பா இவன்தான் டீம் லீடர்... ப்ரொமோஷன் நிச்சயம்' என்றான்

'இவர் உங்க க்ளோஸ் ஃப்ரெண்டா தம்பி..' என்று த்ரியாவின் அப்பா கண்ணனைப் பார்த்து கேட்டார்...

'ஆமா சார்..'

'உங்க பேரென்ன தம்பி..?' என்று அன்பை பார்த்து கேட்டார்

'சார் எ.. என் பேரு.. அன்பு..'

'நீங்க என்ன சம்பாதிக்கிறீங்க..?'

சொன்னான்

'நல்லது... உங்களுக்கு சிகரெட்... லிக்கர்... பழக்கமெல்லாம் உண்டா..?'

அன்பு திணறினான். திரும்பி கண்ணனைப் பார்த்தான்.

கண்ணன் சட்டென்று, 'உண்டு சார்.. ஆனா அவங்கிட்ட ஏன் இதெல்லாம் கேக்கறீங்க..?' என்றான்

'பழைய டெக்னிக்தான்... உன் நண்பனை பற்றி சொல்... உன்னைப் பற்றி சொல்கிறேன்... கேள்விப்பட்டதுண்டா..?' என்றார்

'ஆனா, பொண்ணை எனக்குக்குத்தானே கொடுப்பீங்க..?' என்று அசந்தர்ப்பமாய் கண்ணன் கேட்டுவைக்க... அவர் த்ரியாவைப் பார்த்தார்

த்ரியா மனதிற்குள் கண்ணனை திட்டிக் கொண்டாள் 'ஏண்டா அலையறே... ஒழுங்கா பதில் சொல்லு.. நான் உனக்குத்தான்' என்று சொல்லிக் கொண்டாள்

கண்ணன் சட்டென்று எழுந்தான்... 'பாத்ரூம் எங்கயிருக்கு..' என்று த்ரியாவைப் பார்த்து கேட்டான்... அவள் தன் அம்மாவைப் பார்க்க...

அவள், 'இப்படி வாங்க மாப்ள' என்றாள்…

மாப்ள... ஆஹா... கண்ணன் குளிர்ந்தான்... அவள் சுட்டிக்காட்டிய திசையில் சென்றான். கதவை தாழிட்டுக் கொண்டான். அழாத குறையாக பெருமூச்சு விட்டுக்கொண்டான்.

நான் என் வாழ்நாளில் இப்படி சொதப்பியதில்லை... த்ரியாவிடம் காதல் சொல்லும்போதுகூட இப்படி பயந்ததில்லை... இந்த இண்டர்வியூ மட்டும் சுமூகமாக முடிந்தால்... நானும் த்ரியாவும் கணவன் மனைவி... நினைத்துப் பார்க்கவே டீயை விட இனிமையாக இருந்தது...  கடவுளே.. என்னால் முடியவில்லை... ஏதேனும் அற்புதத்தை நிகழ்த்து... வீட்டுக்கருகில் இருக்கும் கோவிலுக்கு பாத யாத்திரையாய் நடந்து வருகிறேன்... என்று மனதில் வேண்டிக் கொண்டான்.

மீண்டும் ஹாலில்...

த்ரியாவின் அப்பா 'நீங்க என் பொண்ணை இம்ப்ரெஸ் பண்ண மாதிரி என்னை இம்ப்ரெஸ் பண்ணவேயில்லையே தம்பி... அப்புறம் எப்படி..?' என்று தீவிர சிந்தனையுடன் கூறினார்.

'சார்.. நான் உங்க பொண்ணை நல்லா வச்சிப்பேன் சார்.. ஐ மீன் கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லா வச்சிப்பேன் சார்...' என்றான்... டேய் ஏண்டா உளர்றே என்று உள்ளுக்குள தன்னைத்தானே திட்டிக்கொண்டான்

'இல்ல தம்பி.. லவ் வேற.. லைஃப் வேற...' என்று அவர் கிட்டத்தட்ட இல்லை என்பது போல் பதில்கூறவே, கண்ணனுக்கு வயிறு கலக்கியது... அழுகை வரும்போலிருந்தது.. அருகிலிருந்த மீன் தொட்டியில் மீன்கள் அங்குமிங்கும் தாவித்தாவி அசாதாரணமாய் சுற்றியது... கண்ணனுக்கு தலை சுற்றிக் கொண்டு வந்தது...

ஹாலில் அனைவரும் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு கலவரமாயினர்...

'டேய் தலை சுத்துறமாதிரியில்ல..?' என்றான் அன்பு... இவனுக்கு எப்படி தெரியும் என்று கண்ணன் எண்ணும்போது...

'என்னனங்க பில்டிங் ஆடுது' என்று த்ரியாவின் அம்மா கத்தினாள்... 

'ஹய்யோ... பூகம்பம்... பூகம்பம்...' என்று த்ரியாவின் அப்பாவும் கத்தினார்...

கண்ணன் உஷாரானான்... ஆமாம்... தனக்கு வந்த தலைசுற்றல் பூகம்பத்தால்தான் என்று தெரிந்ததும் சுதாரித்துக் கொண்டு எழுந்தான்...

'வாங்க... வெளிய போயிடலாம்..' என்று அங்கிருந்து அனைவரையும் துரிதமாய் ஃப்ளாட்டை விட்டு வெளியே தள்ளிக்கொண்டு தானும் வெளியே வந்தான்... அது 4ஆவது மாடிக்கட்டிடம்... மற்ற ஃப்ளாட்டுகளிலிருப்பவர்களும் வெளியேறிக்கொண்டிருந்தனர்...

'கீழே இறங்குங்க... சீக்கிரம் சீக்கிரம்..' யாரோ கத்தினார்கள்

அன்பு லிப்ட் பட்டனை அழுத்தினான்

'சார் லிஃப்டு வேண்டாம்... படியில இறங்கிப் போங்க...' மீண்டும் ஏதோ குரல்

'ஏன் சார்... லிஃப்ட் கவுந்துடுமா..?' அன்பு கேட்க

'இல்ல... இது கரண்ட் கட் ஆகுற டைம்...' என்று த்ரியா கூறிக்கொண்டே படியிறங்கினாள். கண்னன் துணிச்சலாய் அவள் கையைப் பற்றிக்கொண்டு அவளை கீழே இழுத்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தான்.

அடப்பாவி தன்னைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் கீழே ஓடுகிறானே... என்று அன்பு அவனைத் திட்டிக் கொண்டே இறங்கினான்.

படியில் இறங்கும்போதும் த்ரியாவின் அம்மா இன்னொரு ஃப்ளாட் ஆண்டியிடம் 'அதோ பொண்ணு கைய பிடிச்சிட்டு போறாரே... அவர்தான் மாப்ள..' என்று கூறிக்கொண்டிருந்தாள்...

அதற்கு அந்த ஆண்டி... 'அப்படியா.... பையன் என்ன பண்றான்' என்றாள்

அன்பு எரிச்சலுடன் 'பொண்ணை இழுத்துட்டு ஓடிட்டு இருக்கான்...' என்றதும் அந்த ஆண்ட்டி அன்பை பார்த்து முறைத்தாள்... 'சீக்கிரம் கீழே போங்க... அப்புறம் பேசிக்கலாம்' என்று எரிச்சலுடன் இறங்கினான்

அந்த அபார்ட்மெண்டில் இருந்த அனைவரும் வெளியேறினர்... இவ்வளவு பேரும் இந்த அபார்ட்மெண்ட்டில் இருந்தார்களா.... என்றெண்ணும்படி ஒரே கூட்டமாய் இருந்தது... அனைவரும் பயத்தில் புலம்பிக் கொண்டிருந்தனர்...

பபுள் டாப்பில் தண்ணீர் குலுங்கியதாம்... டேபிள் சேர் குலுங்கியதாம்... சில பொய்யர்கள், கட்டிலிலிருந்து அந்தரத்தில் 5 ஐடி தூக்கிப்போடப்பட்டார்களாம் இப்படி ஏகத்துக்கும் குரல்கள் காதில் விழுந்துக் கொண்டிருந்தது

ரோட்டில் ஓரமாக மூடியிருந்த கார்-ஐ சுட்டிக்காட்டி ஒருவர் உரக்கமாக... 'அங்க பாருங்க... கார் இன்னமும் ஆடுது...' என்றார்... உண்மைதான் கார் அசைந்துக் கொண்டிருந்தது. அனைவரும் சென்று தொட்டுப் பார்த்தனர்...

ஃபோன் பேசிக் கொண்டிருந்த ஒருவர் லைவ் அப்டேட் கொடுத்தார்

'சுமித்ரா தீவுல நிலநடுக்கமாம்..'

'சார் அது சுமத்ரா தீவு..'

'நானும் அதான் சொன்னேன்... சுனாமி வார்னிங்காமே...' என்றார்

இதைக்கேட்ட ஒரு கிழவர் 'அய்யோ சுனாமியா..? கண்ணா..?' என்று வானத்தை பார்த்து புலம்பினார்

‘சொல்லுங்க..’ என்று கண்ணன் திரும்பினான்.

‘உன்னையில்ல...’ என்று த்ரியா அவனை தன் பக்கம் திருப்பி பாவமாக பார்த்தாள்... கும்பலில் இருவரும் சற்று தள்ளியே நின்றிருந்தனர்... கண்ணன் இன்னமும் த்ரியாவின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தான். 

கண்ணன் அவளைப் பார்த்து 'ஹே சாரிப்பா..' என்றான்

'விடு கண்ணா பரவாயில்ல... நீ என்ன பண்ணுவே... அப்பாதான் பிடிவாதம் பிடிக்கிறாரே... '

'நான் உன்னை இம்ப்ரஸ் பண்ணதுக்கு ஒரு ரீசன் இருக்கு... அவரை எப்படி இம்ப்ரெஸ் பண்றது..?' என்றான். இதற்குள் த்ரியாவின் அப்பாவும் அம்மாவும் இவர்களை நெருங்கி வந்தனர்

கண்ணன் அவரிடம், ‘ஆர் யூ ஆல்ரைட் அங்கிள்..’ என்று கேட்டான்

அவர் பதிலளிக்காமல் த்ரியாவை தன் பக்கம் இழுத்துக் கொண்டார்...

ரோட்டில் செல்பவர் அனைவரும் கூட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றார்கள்

‘5 மணிக்கு சென்னையிலயும் சுனாமி வருதாம்..’ என்று யாரோ செல்ஃபோன் கேட்டு ஆருடம் சொன்னதும், கூட்டத்தில் முணுமுணுப்பு அதிகமாக கேட்டது...

‘ரோலண்ட் எமரிஃக் வாஸ் ரைட்... 2012 படத்துல காட்டுனதுதான் நடக்கப்போகுது‘ என்று ஒரு டீன் ஏஜ் பையன் ஆரம்பித்தான்...

‘பிரதர்... அது மாயன்ஸ் சொன்னது... நாட் எம்ரிஃக்...‘ என்று கண்ணன் மறுத்தான்

‘வாட்எவர்..’ என்று புலம்பியபடி அந்த விடலையன் காம்பவுண்ட் சுவரில் ஏறி நின்று அனைவரையும் ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்தான்

‘என்னடா பண்றே.. விழுந்துடப்போறே..?’ என்று ஒருவர் அதட்டினார்

‘ஃபேஸ்புக்ல போடுறதுக்கு ஒரு ஃபோட்டோ..’ என்றான்

‘இந்தவாட்டி சுனாமி வந்தா 30 கி.மீ. கடல் வெளிய வந்துருமாம்... கிட்டத்தட்ட ஆவடி வரைக்கும் பீச் இருக்குமாம்..’ என்று ஒருவர் கிலி கிளப்பினார்

உடனே த்ரியாவின் அம்மா அவர் கணவனைப் பார்த்து... ‘ஏங்க, பேசாம உங்கம்மா வீடு ஒண்ணு ஆவடியில இருக்குல்ல... அங்க போயிடலாம்’ என்றாள்

‘டேய்... கவனிச்சியா... த்ரியாவை நீ கட்டிக்கிட்டா, அந்த பீச் ஹவுஸ் உனக்குத்தான்..’ என்று அன்பு கண்ணனின் காதோரம் கிசுகிசுத்தான்

ஒரு பெண்மனி திடீரென்று... ‘ஐயோ..?’ என்று கத்தினாள்...

‘என்னாச்சு..’

‘என் மாமியார் ரூம்லியே இருக்காங்க... பயத்துல நான் மட்டும் இறங்கி வந்துட்டேன்’ என்று அழுதாள்

‘நல்ல மருமகள்..’ என்று அன்பு சொல்லிக்கொண்டான்...

‘அடக்கடவுளே... அவங்களால இறங்க முடியாதே..! யாராவது போய் தூக்கிண்டு வாங்களேன்..?’ என்று கூறிய அந்த பெண் கூட்டத்தில் இளைஞனாய் இருந்த கண்ணன் பக்கம் திரும்ப

கண்ணன் சுற்றும் முற்றும் பார்த்தான். பலரும் இப்போது அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்...

இம்ப்ரஸ் செய்ய இதுதான் நேரமோ.. என்று மனதில் நினைத்துக்கொண்டு

‘எந்த ஃப்ளாட்டு..’ என்றான்

‘9th ஃப்ளோர் ஃப்ளாட் நம்பர் N7’

‘ஓகே..’ என்று கண்ணன் வீரமாக கிளம்ப, த்ரியா அவன் கைகளைப் பிடித்தாள்

‘த்ரியா.. ஐ வில் பி ஃபைன்... டோண்ட் ஒர்ரி...’

‘வரும்போது அப்படியே என் ஃப்ளாட்லருந்து செல்ஃபோனையும் எடுத்துட்டு வந்துருங்களேன்... விட்டுட்டு வந்துட்டேன்’ என்றாள்.

அன்பு சிரித்தான். கண்ணன் அவனையும் இழுத்துக்கொண்டு ‘வாடா போலாம்...’ என்று வீரமாக அபார்ட்மெண்டிற்குள் நுழைந்தான்.

அன்றுகாலைவரை கலகலவென்று இருந்த அந்த அபார்ட்மெண்ட்... இப்போது யாருமேயில்லாமல் கரண்ட்டும் இல்லாமல் காலியாக இருந்தது... படிக்கட்டில் மெல்ல ஏறிக்கொண்டிருந்தார்கள்

‘டேய் என்னை ஏண்டா இழுத்துட்டு வந்தே..’ என்று அன்பு கோவப்பட்டான்

‘த்ரியா அப்பாவை எப்படியாவது இம்ப்ரெஸ் பண்ணனும்டா...’ என்றான்

‘நீ உன் ஆளோட அப்பாவை இம்ப்ரெஸ் பண்றதுக்கு என்னை ஏண்டா உள்ளே இழுத்தே... பில்டிங் விழுந்தா மூணு பேரும் கம்ப்ரெஸ் ஆயிடுவோம்..’

‘மூணு பேரா..?’

‘மாடியில இருக்கிற ஆயாவையும் சேத்து சொன்னேன்..’

‘அவங்க ஆயா இல்லடா பாட்டி...’

‘ரொம்ப முக்கியம்... சீக்கிரம் ஏறு..’

ஒன்பதாவது மாடியில் ஃப்ளாட்டிற்குள் நுழைந்தனர்...

அறை திறந்தே இருந்தது...

டிவி ஓடிக்கொண்டிருந்தது... (இண்வர்டர் உபயம்)

டிவியில் LIVE என்று போட்டிருந்தது… கடல் அலை உயரே கிளம்பி ஊருக்குள் புகுந்து கார், பஸ், என எதையும் விட்டு வைக்காமல் துவம்சம் செய்ய… தொடர்ந்து வந்த அலைகள் மக்கள் கூட்டத்தை ஒரே வாயில் அள்ளிப் போட்டுக்கொண்டு… என்று காட்சி படுமோசமாக தெரிய… 

அன்பு அதைப்பார்த்து பதறினான்... ‘போச்சுடா... 5 மணிக்கு வரவேண்டிய சுனாமி சீக்கிரமா வந்திடுச்சு போலருக்கு...’ என்றான்

கண்ணனும் உறைந்தான்... அடக்கடவுளே... த்ரியாவுடனான வாழ்க்கை வெறும் கனவுதானா...

டிவியில் ‘நேயர்களே இதே போல் இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் மீண்டும் சுனாமி வரும் அபாயம் உள்ளது... இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது 2004ல் சுனாமி தமிழகத்தை தாக்கிய ஒரு காட்சி..’ என்றான்

அன்பு கடுப்பானான்…

‘அதை ஏண்டா இப்போ காட்றீங்க... தியேட்டர்ல புதுப்படம் பொட்டி வரலைன்னா பழைய படத்தை போடுவாங்கல்ல.. அந்தமாதிரி போடுறாங்க பாரு’ என்று திட்டிக்கொண்டே அன்பு டிவியை அணைத்தான்... 

ஃப்ளாட்டில் கண்ணன் அங்குமிங்கும் தேடினான்... அறையில் பாட்டி கட்டிலில் படுத்திருந்தாள்...

‘இதோ இருக்காங்க.. அப்படியே தூக்கிடலாம் வாடா...’ என்று கண்ணன் அவளை தூக்க போக, பாட்டி கையிலிருந்து ஊசியால் கண்ணனின் கையில் குத்தினாள்

‘ஆஆ...’ என்று விலகினான்

‘என்னடா ஆச்சு..?’

‘குத்துறாங்கடா..? கையில ஊசியிருக்கு ‘ என்றான்

‘டேய்.. யாருடா நீங்க...’ என்று பாட்டி அதட்டினாள்

‘ஐயோ... பாட்டி.. நாங்க உன்னை காப்பாத்த வந்துருக்கோம்..’

‘தனியாய இருக்கிற பொம்பளை கிட்ட கலாட்டா பண்றீங்களா..?’

‘ஆமா... ஈவ் டீசிங் பண்றாங்க... பாட்டி உனக்கே இது ஓவரா இல்ல...’ என்று கண்ணன் அவள் கையிலிருந்த ஊசியை பிடுங்கி தூர எறிந்தான்

‘தூக்குடா பாட்டிய..’  என்று இருவரும் அவளைத் தூக்கி கொண்டு நடக்க...

பாட்டி அவர்களிடம், ‘டேய் இருங்கடா... 5 மணிக்கு டிவியில கைலாச யாத்திரை போடுறாங்க நான் பாக்கணும்..’ என்றாள்

‘5 மணிக்கு கைலாசத்துக்கே போய் பாக்கலாம் பாட்டி... சுனாமி வருதாம்...’ என்றான்

‘என்னடா உளர்றே...’ என்றாள்

‘உனக்கு என்ன வயசு பாட்டி..?’ என்று அன்பு கேட்டான்

'படிச்சவன்தானே நீ... பொம்னாட்டிகிட்ட வயசு கேக்க கூடாதுன்னு தெரியாதா உனக்கு..' என்றாள்

'என்ன ஒரு 90 இருக்குமா..'

‘அடப்பாவி 84தான்டா ஆறது...’ என்றாள்

‘டேய்... நம்ம ரெண்டு பேரு வயசை கூட்டினாலும் இவங்க வயசு வரலை... இவங்களை காப்பாத்துறதுக்கு நம்ம ரெண்டு பேரு உசுர பணயம் வைக்கணுமா..?’ என்றான்

‘டேய் பாவம்டா..’ என்று கண்ணன் கருணை காட்டினான்

திடீரென்று அன்பு கால்கள் குறுகுறுத்தது ஒருவிதமாக அதிர்ந்தது...

‘ஐயோ.. மறுபடியும்... ஆடுது... ஆடுது..’ என்று கத்தினான்

‘என்னடா... என்னாச்சு..’ என்று கண்ணனும் பதறினான்

‘சே.. சாரிடா, பேண்ட் பேக்கெட்ல மொபைல் வைப்ரேட் ஆச்சா... நான் பயந்துட்டேன்’ என்று அமைதியானான்

‘முட்டாப்பய..’ என்றாள் பாட்டி

இருவரும் நாலாவது ஃப்ளோருக்கு வந்தடைந்து த்ரியாவின் ஃப்ளாட்டில் நுழைந்தனர்... கண்ணன் த்ரியாவின் மொபைலை தேடி எடுத்துக் கொண்டான்

அந்த ஃப்ளாட்டின் மெயின் கதவில் ஏதோ வித்தியாசமான எல்க்ட்ரானிக் பூட்டு பொறுத்தப்பட்டிருக்க... அதை ஆர்வமாய் பார்த்த அன்பு ‘என்னடா லாக் சிஸ்டம் இது.. வித்தியாசமாயிருக்கு...’ என்று கூறியபடி கதவை மூடினான். பட்டென்று மிகத்தீவிரமாக அது மூடிக்கொண்டது...

‘என்னடா பண்ணே..?’ என்று கண்ணன் அதிர்ச்சியுடன் வந்து கதவை திறக்க முயல... திறக்க முடியவில்லை... அந்த எலக்ட்ரானிக் நம்பர் சிஸ்டத்தில் கால்குலேட்டர் நம்பர் பேட் போல் எண்களைக் காட்டியது...

‘அடப்பாவி... இது நம்பர் லாக்டா... நம்பர் தெரியாம துறக்க முடியாது...’ என்று கண்ணன் கோபமாக கத்தினான்

‘அழகான பொண்ணு இருக்கிற வீட்டுக்கெல்லாம் இப்போ நம்பர் லாக்-லாம் வைக்கிறாங்கன்னு எனகெப்படிடா தெரியும்..’ என்று அன்பு புலம்பினான்

‘5 மணி ஆச்சாடாப்பா..?’ என்று அந்த பாட்டி விபரீதம் புரியாமல் கேட்டது... இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்... திடீரென்று மீன் தொட்டி மீண்டும் ஆட்டம் கண்டது... சுற்றும் முற்றும் பார்க்க... ஹால் மீண்டும் அதிர்ந்தது.

‘அய்யோ... ரெண்டாவது ஷேக்... மறுபடியும் பூகம்பம்..’ என்று அன்பு கத்தினான். கண்ணன் அந்த கதவை திறக்க முயன்று முடியாதவனாய் சுற்றும் முற்றும் பார்த்தான்... பால்கனி தெரியவே... ஓடிச்சென்று அதை எட்டிப் பார்த்தான். அந்த பால்கனி, கட்டிடத்தின் பின்பக்கத்தில் அமைந்திருந்தது... ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி... யாரையும் உதவிக்கும் கூப்பிட முடியாது... என்ன செய்யலாம் என்று பயந்த நிலையில் நின்றிருந்தான்..

இம்முறை ஆட்டம் அதிகமாக இருக்கவே... அன்பைப் பார்த்து ‘டேய் உள்ள இருக்கிறது ரிஸ்க்… தூக்குடா பாட்டிய..?’ என்றான்

…………………

அதே நேரம் வெளிப்புறத்தில்... இரண்டாவது முறையாக பில்டிங் அதிர்ந்துவிட்டு பிறகு அமைதியானதைப் பார்த்து வெளியே நின்றிருந்த அனைவரும் அய்யோ.. அய்யோ.. என்று அலறிக்கொண்டிருந்தனர்...

த்ரியாவும் பயத்தில் கிட்டத்தட்ட அழுதுக் கொண்டிருந்தாள்... 

'அழாதேம்மா... வந்துருவாங்க’ என்று அவள் அப்பா தேற்றிக்கொண்டிருந்தார்...

அதோ பாருங்க கார் இன்னும் ஆடுது... என்று மீண்டும் காரை வைத்து நிலநடுக்கத்தை அளந்து கொண்டிருந்தனர்.

‘இரண்டாவது தடவை ட்ரெமர் வர்றது ரொம்ப ஆபத்து... பில்டிங்க்கு உள்ள போனவங்களுக்கு என்னாச்சோ..?’ என்று ஒருவர் சங்கூதினார்...

‘ஐயோ... என் மாமியாருக்கு ஏதாவது ஒண்ணுன்னா அவர் என்னை தொலைச்சிடுவார்...’ என்று பாசமான மருமகளும் புலம்பிக்கொண்டிருந்தாள்...

இதைப் பார்த்து மேலும் பொறுமையாயிருக்க மனம் வராமல், த்ரியா அருகிலிருக்கும் ஒருவரிடம் மொபைல் வாங்கி கண்ணன் நம்பருக்கு டயல் செய்தாள். லைன் கிடைத்தது

‘கண்ணா..?’

‘த்...த்... த்ரியா.. சொல்லு..?’

‘எங்கேப்பா இருக்க..? மறுபடியும் நிலநடுக்கம் வந்துச்சு... சீக்கிரமா வெளியே வா..?’ என்றாள்

‘ந... நான் பில்டிங்கலருந்து வெளியே வந்துட்டேன்... ஜஸ்ட் தட்... இ... இன்னும் லேண்ட் ஆகலை..’ என்றான்

‘என்னடா குழப்பறே..?’ என்றாள்

‘உ... உங்க.. ஏரியாவுல எவ்வளவு நேரம் கரண்ட் கட்...?’ என்றான்

‘இப்போ 4.40 ஆகுது... 5 மணிக்கு வந்துடும்...’

‘பெட்டர் 5 மணிக்கே வரட்டும்...’ என்றான்

‘ஏன் கேக்குறே..?’

‘ஏன்னா.. உங்க அபார்ட்மெண்ட் பவர் லைன்லருந்துதான் கி...கீழ இறங்கிட்டு இருக்கோம்..’ என்றான்

‘வாட்..?’

-------------

பாட்டியை கண்ணன் உப்பு மூட்டை போல் தூக்கியிருக்க... மூவரும் அந்த அபார்ட்மெண்டின் பவர் கனெக்ஷன் கொண்டு செல்லும் பைப்லைனில்... டூம் போன்ற பாதையில் இறங்கிக் கொண்டிருந்தனர்... இதற்குள் அங்கு த்ரியாவும் வந்து சேர அவளைத் தொடர்ந்து இன்னும் சிலரும் வந்தடைந்தனர்... மேலே அனைவரும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர்

மணி 4.50...

‘கரண்ட் வர்றதுக்கு இன்னும் பத்து நிமிஷம்தான் இருக்கு... சீக்கிரம் இறங்குங்க..’ என்று ஒருவர் கீழிருந்து கத்திக்கொண்டிருக்க...

கண்ணன் முதுகில் அமர்ந்திருந்த பாட்டி அவன் கழுத்தை இறுகப்பற்றியிருந்ததால் திணறினான்

‘பாட்டி... க... க... கழுத்து....’

‘ஏண்டா... நான் பாட்டுக்கு சிவனேன்னு ரூமுல படுத்துட்டிருந்தேன்... இந்த வயசுல என்னை தூக்கிட்டு போறியே நியாயமா..?’ என்றாள்

‘ஆமா பாட்டி... உன்னை கடத்திட்டு போய் கல்யாணமா பண்ணப்போறோம்... பேசாம வா..?’ என்று அன்பு அந்தரத்திலிருந்தே அதட்டினான்...

‘இன்னும் 8 நிமிஷம்தான் இருக்கு...’ என்று மீண்டும் தரையிலிருந்து குரல்

‘ஏன் சார்... யாரு சார் அது.. ரன்னிங் கமெண்ட்ரி குடுக்கிறது... இ... இங்க சொல்றதுக்கு பதிலா... E.B.ஆஃபீசுக்கு ஃபோன் ப.. பண்ணி சொல்லலாமில்ல..?’ என்று கண்ணன் கூறவே

‘அட ஆமால்ல... இ.பி. நம்பர் உங்கிட்ட இருக்காப்பா..’ என்று கீழே முணகல் கேட்டது...

‘சரியாப் போச்சு..’ என்று மீண்டும் இறங்க ஆரம்பித்தனர்...

ஒருவழியாக தரையைத் தொட்டு பாட்டியை பத்திரமாக இறக்கி விட்டதும்... பட் என்று சத்தத்துடன் கரண்ட் வந்தது... அனைவரும் தன்னையறியாமல் கைதட்டினர்...

மீண்டும் அனைவரும் கூடியிருந்த வெளிப்புற இடத்துக்கு வந்தனர்... வீட்டிற்குள் செல்ல விருப்பமில்லாமல் (பயம்தான்..) அனைவரும் அங்கேயே ஆளுக்கொரு திட்டிலும், மேட்டிலும் அமர்ந்தனர்...

‘சார் டீ..’ என்று ஒருவன் வந்து டீயை நீட்டினான்

‘வேண்டாம்ப்பா..’ என்று கண்ணன் மறுத்தான்

‘சார்... பாட்டிய காப்பாத்தியிருக்கீங்க... இந்த ரோட்லியே இன்னிக்கி நீங்கதான் ஹுரோ... உங்களுக்காகவே சூப்பரா செஞ்ச ஸ்பெஷல் சுனாமி டீ... சார்.. வேண்டாம்னு சொல்லாதீங்க...’

‘சுனாமி டீயா... ஹாஹ்ஹா...’ என்று சிரித்தபடி வாங்கி குடித்தான். அவனது வருங்கால மாமியார் போட்ட டீயை விட நன்றாகவே இருந்தது...

அன்பு அவனருகில் வந்தான்... ‘ஏண்டா... சும்மாயிருந்த பாட்டிய தூக்கி தோள்ல போட்டுட்டு வந்துட்டு... ஹுரோவா  நீ... இதை  வெளிய சொல்லாத…’ என்றான்

இப்போது த்ரியாவின் அப்பா வந்தார்...

‘தம்பி இங்க எதுக்கு உக்காந்துக்கிட்டு... அதான் ஒண்ணும் ஆபத்து இல்லன்னு ஆயிடுச்சே... வாங்க வீட்டுக்குள்ளேயே போய் பேசுவோம்...’

‘இருக்கட்டும் சார்... காலையிலியே உங்களுக்கு ரொம்பவும் தொந்தரவு கொடுத்துட்டேன்... ரொம்ப சாரி சார்... ஆனா மறுபடியும் வருவேன் சார்... உங்களை எப்படி இம்ப்ரெஸ் பண்றதுன்னு தெரிஞ்சுக்கிட்டு வர்றேன்... ஏன்னா எனக்கு த்ரியா ரொம்ப முக்கியம்’ என்று அவளையே பார்த்தான்

‘வரவேண்டியது நீயில்லப்பா நாங்கதான்... வாழ்கையே தற்காலிகம்னு ஆயிடுச்சி... இன்னிக்கி வராத சுனாமி வந்திருந்தா... நான் என்னத்தை கட்டிக்கிட்டு போயிருப்பேன்... சீக்கிரமே உங்கப்பா அம்மாவை பாக்க நாங்க வர்றோம்...’ என்று கூற... த்ரியா வெட்கப்பட்டாள்...

‘ஹே..!’ என்று சந்தோஷத்தில் கண்ணனும் குதித்தான்...

கூட்டம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து அனைவரும் மீண்டும் கான்க்ரீட் கூண்டில் சென்று அடைப்பட்டுக்கொண்டதும்...

த்ரியாவும் கண்ணனும் மட்டும் அவர்களின் பைக் பார்க்கிங் இடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்...

சற்று தொலைவில் நின்றிருந்த அன்பு... ‘அதான் கல்யாணம் பண்ணி வைக்கப் போறாங்கள்ல... போதும் வாங்க கண்ணன் சார்..’ என்று அலுப்புடன் கூப்பிட

‘சரி.. நான் கிளம்புறேன்... பை குட்நைட்’ என்று திரும்பி திரும்பி பார்த்து வெட்கப்பட்டு கொண்டே அன்பு ஏறியிருந்த பைக்-ஐ வந்தடைந்தான்.

த்ரியா உள்ளே சென்று மறைந்தாள்

அன்பும், கண்ணனும் கிளம்பி போகும்போது...

அன்று அடிக்கடி ஆடிக்கொண்டிருந்த அந்த பூகம்ப கார்... மீண்டும் ஆடிக்கொண்டிருந்தது...

அந்த காரை இருவரும் ஆர்மவாக நெருங்க சடாரென்று அந்த கார் கதவு திறந்து கொண்டது... அதிலிருந்து ஒரு புடவை அணிந்த பெண் விறுவிறுவென்று நடந்து எதிரில் இருக்கும் இன்னொரு தெருவில் சென்று மறைந்துவிட... காருக்குள்ளிருந்து கண்ணாடியணிந்த ஒருவன் கீழே இறங்கி சுற்றும் முற்றும் பார்த்து காரை மீண்டும் பூட்டிவிட்டு எதுவும் தெரியாதபடி நடந்து அபார்ட்மெண்டுக்குள் நுழைந்து சென்றான்...

அன்பு கண்ணனைப் பார்த்து ‘இப்ப தெரியுதா… ஏன் ஊருக்குள்ள பூகம்பம்லாம் வருதுன்னு..’ என்றான்

- நிறைவு -



Signature

Tuesday, April 10, 2012

எண்ணத்திரை : [அதிசுவாரஸ்யமானப் புதிர்ப்போட்டி]


மேஸ் கேம் (வழி கண்டுபிடிக்கும் புதிர்ப்போட்டி) விளையாடியிருக்கிறீர்களா..?

ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்... முயல் ஒரு மேல் மூலையில் இருக்கும்... கீழ்மூலையில் கேரட் துண்டு ஒன்று இருக்கும்... பசியோடிருக்கும் முயலுக்கு கேரட் துண்டை கண்டுபிடிக்க உதவுங்கள் என்று வினவப்பட்டு, இருவருக்குமிடையே குறுக்கும் நெடுக்குமாய் ஏக குழப்பத்தில் கோடுகள் இருக்கும்... கோட்டை வரைந்து பார்க்கும்போது சுற்றி சுற்றி எங்கோ போய் எங்கோ வந்து கடைசியில் மூச்சிரக்க முயல் கேரட் சாப்பிடும்...
(உதாரணத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்க்கவும்)



பிரபல எழுத்தாளர் ஸ்டீஃபன் கிங்-ன் நாவலைத் தழுவி 'தி ஷைனிங்' என்ற மிகச்சிறந்த த்ரில்லர் படம் ஒன்று வந்தது (டைரக்ட் : ஸ்டான்லி கூப்ரிக்). அதில் க்ளைமேக்ஸ் காட்சியில் கோடாரியுடன் துரத்தும் வில்லனிடமிருந்து உயிருடன் தப்பிக்க ஒரு தாயும் மகனும் ஒரு பூங்கா போன்ற அமைப்புக்குள் ஓடுவார்கள். அது ஒரு மேஸ் போன்ற அமைப்புடைய பூங்கா... ஓடும்போது முட்டுச்சந்து இருந்தால் திரும்பி வரும் வழியில் கொலைகாரனிடம் மாட்டிக்கொள்ளும் அபாயம் கொண்ட மேஸ் பூங்கா வடிவமைப்பு அது. அதைப் பார்க்கும்போது நமக்குள் இப்படி உண்மையிலேயே ஒரு மேஸ் அமைப்பில் மாட்டிக் கொண்டால் நாம் என்னவாவது என்ற ஒரு கிலி ஏற்படும்... அந்த கிலி இப்போது பட்டப்பகலில் உண்மையாகியுள்ளது. சென்னை மவுண்ட் ரோட்டில் நுழைந்து பாருங்கள் எங்கு போய் எங்கே வெளியே வரமுடியும் என்று தெரியாமல் நீங்கள் த்ரில்லாய் திணறுவது கியாரண்டி...

புதிதாய் மாற்றியமைக்கப்பட்டுள்ள பாதை இதுதான்...

இதற்கும் மேலே குறிப்பிட்டுள்ள
மேஸ் கேமிற்கும் வித்தியாசம்
மிகக்குறைவுதான் இல்லையா..?


இரண்டு வாரத்துக்கு முன்பு, ஒரு ரேடியோ பேட்டிக்காக  எங்கள் குழுவுடன் நடிக நண்பர் பாஸ்கியும் அழைக்கப்பட்டிருந்தார். அவரை பிக்-அப் செய்வதற்காக அவர் பணிபுரியும் ஐ.ஓ.பி பேங்க்-ற்கு (Mighty மவுண்ட் ரோடு கிளை) சென்றுக் கொண்டிருந்தோம். ஃபோனில் பேசும்போது அவர், '1.30 மணிக்கு நான் ரெடியா இருக்குறேன். நீங்க என்ன பண்ணுங்க..! பெங்களூர் போயிட்டு அப்படியே மவுண்ட் ரோடு வந்துருங்க... அதுதான் ஷாட் ரூட்' என்றார்.. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை... இவர் ஏதோ விளையாடுகிறார் என்று அவரை பிக்-அப் செய்ய வழக்கமான வழியில் வந்து மவுண்ட் ரோட் நுழைய சென்றோம். அன்று காலைதான் மவுண்ட் ரோடு வழியெங்கும் விழிபிதுங்குவதுபோல் மாற்றியமைக்கப்பட்டிருந்தது.


அங்குசுற்றி... இங்குசுற்றி... ஒரு வழியாக அவர் ஆஃபீஸ் வாசலையடை அரை மணி நேரம் லேட்டானது... சாரி சொன்னதுக்கு... 'சாரியெல்லாம் எதுக்கு சார்..? நீங்க பேங்களூர் ரூட் வழியா வரலியா..!?' என்று சிரித்துக் கொண்டே காரில் ஏறினார். அப்போதுதான் அவர் சொன்னதன் உள்ளர்த்தம் புரிந்தது.

மெட்ரோ ரயிலெல்லாம் ஓகேதான்... பெட்ரோல் விற்கும் விலையில், அனைவரும் லைசன்ஸ் டெஸ்ட்டின் போது எட்டுப்போட்டு காட்டியது போல் சுற்றிக்கொண்டிருப்பது பார்க்க பாவமாய்த்தான் இருக்கிறது. இந்த புதுக்குழப்பங்களால், ஆம்புலன்ஸ் ஒன்று டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டு கடக்க சிரமப்படுவதை கண்ணால் பார்த்தேன்.

ஆம்புலன்ஸ் எதிரில் இருக்கும் ஆஸ்பத்திரியை கண்ணில் மட்டுமே பார்த்துவிட்டு ஒன்வேயில் எங்கோ சுற்றிவிட்டு பேஷண்டை கொண்டு வந்து சேர்ப்பதற்குள் என்னவாவது..? கொடுமைதான். டிராஃபிக் போலீசையும் குற்றம் கூறுவதற்கில்லை... கத்தி கத்தி டிராஃபிக் க்ளியர் செய்ய மிகவும் சிரமப்படுகின்றனர். பூந்தமல்லி ஹைரோடில் சில வழிகள் இந்நேரம் முதல் இந்நேரம் வரை என்று போர்டு மாட்டி வைக்கப்பட்டுள்ளது... ஏக குழப்பம்.

பயணத்தின்போது 'எங்கே செல்லும் இந்த பாதை..? யாரோ யாரோ அறிவாரோ' என்று வண்டி ஓட்டுபவர்கள் ஏர்வாடி எக்ஸ்பரஷன் கொடுப்பதை பார்க்க முடிகிறது....


Signature

Monday, April 09, 2012

அபிராமி தியேட்டிரில் அம்புலி 50வது நாள்

அம்புலியின் 50வது நாளன்று ஆஃபீசில் கேக் வெட்டி கொண்டாடினோம்... 3D படம் என்பதால் கேமிராமேன் சதீஷ்.Gயைத்தான் கேக் வெட்ட சொன்னோம்... வெட்டினார்... அன்று காலையில் USலிருந்து வந்திருந்த எனது நண்பர் திரு.வசந்தராமன் அவர்களது பெற்றோரின் சஷ்டியப்த பூர்த்திக்கு குழுவாய் சென்று அவர்களிடம் ஆசி பெற்று வந்தோம்.





மனதிற்கினிமையாய் மாலை திருப்போரூர் முருகர் கோவிலுக்கு போகலாம் என்று எண்ணியிருந்தபோது... உதவி இயக்குநர்கள் அனைவரும் குழுவாக போய் படத்தை பார்க்கலாம் என்று மாற்று யோசனை சொன்னார்கள். சரி 'செய்யும் தொழிலே தெய்வம்' என்று எஸ்கேப் தியேட்டரில்  4 மணியாட்டம் சென்று படத்தை பார்க்கலாம் என்று முடிவெடுத்து புக் செய்ய நினைத்தோம் 'ஹவுஸ் ஃபுல்' என்று காட்டியது.. சந்தோஷமாய் இருந்தது... அடுத்த அபிராமி தியேட்டிரில் 'P'ரோவில்தான் டிக்கெட் கிடைத்தது. 10 டிக்கட் பதிவு செய்துக்கொண்டு கிளம்பினோம்.

படத்தை 50ஆவது நாள்தான் பார்ப்பேன் என்று 'வேணி' என்ற எங்கள் குழுவின் தோழி ஒருவர் கூறியிருந்தார். ரிஸ்க் வேண்டாம் பார்த்துவிடுங்கள் என்று நாங்கள் முதல் வாரம் அழைத்ததற்கு... 'நிச்சயம் 50ஆவது நாள் படம் ஓடும் அப்போது பார்க்கிறேன்' என்று திண்ணமாக கூறியிருந்தார்... அவர் வாய் முகூர்த்தம் பலித்ததால், மறக்காமல் அவரையும் அழைத்திருந்தோம்.
அங்கும் ஹவுஸ் ஃபுல்லாக காட்சி துவங்கியது... கைதட்டல்கள்... ஜாலி கிண்டல்கள் என்று மக்கள் சந்தோஷமாக படம் பார்த்தது மனதிற்கு தெம்பாய் இருந்தது...

படம் முடிந்ததும் ரோபோ அபிராமி தியேட்டரின் ஹால் சூப்பர்வைஸர், ஹால் செக்யூரிட்டி, டிக்கெட் கிழிப்பவர், அரங்கில் டார்ச் அடித்து சீட் காட்டுபவர் மற்றும் ஹவுஸ் கீப்பிங் நண்பர்கள் என்று அனைவருடனும் நின்று குழுவாய் ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம்.




ஹால் சூப்பர்வைஸருடன் பேசுகையில், 'நீங்கள் நிச்சயம் 100வது நாளுக்கும் இங்கேயே வரவேண்டும் அதுவே என் விருப்பம்' என்றார்... அவர் வாய் முகூர்த்தமும் பலிக்க வேண்டும். மேலும் அரங்கை சுத்தம் செய்துக் கொண்டிருந்த ஹவுஸ்கீப்பிங் நண்பர்களுடன் வினவினோம்... அவர்களும் '50வது நாள் உங்கள் படம் ஹவுஸ்ஃபுல் ஆகுது.. இதுக்கு மேல உங்களுக்கு என்ன சார் பப்ளிக் ரெஸ்பான்ஸ் வேணும்... நாங்கதான் தினம் பாக்குறோமே கூட்டம் உங்க படத்துக்கு நல்லா வந்துட்டிருக்கு... இப்போ லீவுதானே... இன்னும் வருவாங்க பாருங்க...' என்று நம்பிக்கை தெரிவித்தனர்.


Signature

Sunday, April 08, 2012

கிரகணம் : எனது முதல் ஆடியோ சிறுகதை

புத்தகங்கள் படிப்பது பெரும் சுகம்... (ஏனோ பாடப்புத்தகம் மட்டும் தூக்கமாத்திரை...) ஆனால் அதே புத்தகங்களை பிறர் படிக்க நாம் காது கொடுத்து கேட்டுக் கொண்டிருப்பது அதீத சுகம்...


சிறுவயதில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு புத்தகம் படித்துக் காட்டும் வழக்கம் இன்று மிக மிக குறைந்தேயுள்ளது. உங்கள் தாய் தந்தையர் தலைமுறையினரை கேட்டுப் பாருங்கள்... அவர்கள் சிறுவயதில் ஏதாவது ஒரு புத்தகத்தை அவரவர் பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு வாசித்து காட்டியதை சொல்லுவார்கள்.


ஆனால் இந்த அனுபவத்தை இப்போதும் நமக்கு தரவல்லது ஆடியோ புத்தகங்கள்...

புத்தகத்தை கண்ணைச் சுருக்கி மெனக்கெட்டு வாசிக்காமல் காதில் Headphones அணிந்தபடி கேட்டுக் கொண்டிருக்கலாம்... இது போல் புத்தகங்களை கேட்கும்போது ஆரம்பத்தில் சிறிது காலம் தூக்கம் வரும்... பிறகு பழகிவிடும்...

உதாரணம், நாம் ஒரு கதைப்புத்தகத்தை படிக்கும்போது வழக்கமாக நாம் படிக்கும் ஒவ்வொரு வரிகளுக்கும் கற்பனையில் காட்சிப்படுத்தி பார்த்துக் கொண்டிருப்போம்... அப்போது, படித்தல் காட்சிப்படுத்துதல் என்று இருவேறான செயலை நாம் செய்கிறோம். ஆனால், படித்தலைவிட கேட்டல் என்பது எளிய செயல் என்பதால் அதன் அடுத்த நிலையான காட்சிப்படுத்துதல் இன்னும் விஸ்வரூபமெடுக்கும். இதை ஆடியோ புத்தகங்கள் கேட்டவர்கள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.

ஆங்கில மொழியில் பல புத்தங்கள் ஆடியோ வடிவில் வந்துள்ளன... நம் ஊரிலும், கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்துமதம்', சுவாமி சுகபோதானந்தாவின் 'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்', போன்ற சில புத்தகங்களின் ஆடியோ வடிவம் வந்து வெற்றியும் பெற்றுள்ளன..

முயற்சித்து பாருங்கள்...

நம்மூர் ரேடியோவில் முன்பெல்லாம் ஒலிச்சித்திரம் போடுவார்கள்... உங்களுக்கும் அது நினைவிருக்கலாம்... ஒவ்வொரு வாரம் ஒரு படம் என்று போடும்போது, குடும்பத்தில் அனைவரும் வேலைகளை துரிதமாக முடித்துக் கொண்டு ஒலிச்சித்திரம் கேட்க அமர்ந்துவிடுவர்...

அடுத்து திரு.எஸ்.வி.சேகர் அவரது நகைச்சுவை நாடகங்களும்  ஒலிநாடாவில் மிக பிரசித்தம்...

'என்னப்பா இது... பொண்ணுக்கு மீசையெல்லாமிருக்கு..?'

'அது ஒண்ணுமில்லடா... பொண்ணு கொஞ்சம் அப்பா ஜாடை... அதான்..'

இப்படி அவரடிக்கும் சிறுவயதில் (இப்போதும் பல சமயம்) லைட்டை அணைத்துவிட்டு கண்ணைமூடிக் கேட்டுக் கொண்டு இருட்டில் சிரித்த நிமிடங்கள் மறக்கமுடியாதவை.

ரேடியோவிலேயே சிறுகதைகளை வாசித்து காட்டுவார்கள்... அதுவும் இப்போது இல்லை... FMகளில் இது போன்ற ஆடியோ புத்தகங்களை (காப்பிரைட்டுடன் ஆடியோ செய்து) ஒலிபரப்பலாம். மக்களுக்கு நிச்சயம் உபயோகமாக இருக்கும்.

'ஹாய் மதன்' கேள்வி பதில்களையோ அல்லது சுஜாதாவின் ஏன்? எதற்கு? எப்படி? போன்ற புத்தகங்களின் கேள்வி பதில்களையோ FMகளில் நிகழ்ச்சியின் ப்ரேக்குகளுக்கு முன்னோ பின்னோ ஒரு கேள்வி என்கிற விகிதத்தில் வாரம் முழுவதும் போடலாம். ஒவ்வொரு கேள்விபதில்களும் முத்தானவை. FMகளின் சப்போர்ட் இல்லாமல் இது போன்ற ஆடியோ புத்தக கலாச்சாரம் தோன்றுவது சற்று சாத்தியக்குறைவே...

'வாக்கிங்' போகும் நேரத்திலோ, ட்ரெய்னிலோ, பஸ்ஸிலோ பயணிக்கும் நேரம், அல்லது தூங்குவதற்கு முன் என்று ஒரு அத்தியாத்திற்கு ஒரு நாள் என்று நேரத்தை சிறந்த முறையில் செலவிடலாம். இது சாத்தியமானால், படிக்க நேரமில்லாத நம் பரபரப்பு வாழ்விலும் ஒவ்வொன்றாய் பல புத்தகங்களை கேட்டு முடிக்கலாம்.

சவுண்ட் கம்மியாக வைத்து காதுக்கு வசதியான headphonesல் வயது முதிர்ந்து படிக்க முடியாத பெரியவர்களுக்கும் ஆன்மீகம் சம்மந்தமான புத்தகங்களை கொடுத்து கேட்க வைப்பது Hi-Tech புண்ணியம்.

பலருக்கும் (எனக்கும்) விருப்பமான 'பொன்னியின் செல்வன்' நாவலை எப்படியாவது ஆடியோ முறையில் வெளிக்கொண்டு வரவேண்டும் என்று நான் எனது நண்பர்கள் குழுவுடன் 'ஓர் இரவு' திரைப்படம் எடுப்பதற்கு முன் முயற்சித்து கொண்டிருந்தேன்... ஆனால் போதுமான நேரமும் தயாரிப்பு செலவும் கிட்டவில்லை... ஆனால் அதற்குபிறகு, திரு. பாம்பே கண்ணன்  'சிவகாமியின் சபதம்' நாவலை ஆடியோ வடிவில் ஸ்வாதி சாஃப்ட் சொல்யூஷன் ஒருங்கிணைப்பில் வெளியிட்ட செய்தியறிந்து ஆவலாய் சிடியை வாங்கி கேட்டேன். அமோகமாக இருந்தது. நான் 'அம்புலி' திரைப்படத்திற்கு லொகேஷன் பார்க்க போன போது ஊர் ஊராய் சுற்றும் வேளை இந்த 'சிவகாமியின் சபதம்' ஆடியோ புத்தகம் எனக்கு மிகப்பெரியதொரு வரப்பிரசாதமாய் அமைந்தது. 

லேண்ட்மார்க், மியூஸிக் வேர்ல்டு போன்ற ஆடியோ சிடி கடைகளில் வாங்கி கேட்டுப் பாருங்கள்... அல்லது ஆன்லைனில் வாங்குவதற்கு இங்கே க்ளிக்கவும்...

தற்போது இதே குழுவினர்கள் 'பார்த்திபன் கனவு' புத்தகத்தை ஆடியோ எடுத்துக் கொண்டிருப்பதாய் சேதி... கண்ணன் சாரை நேரில் சந்தித்து பாராட்ட வேண்டும். நிச்சயம் நல்லதொரு முயற்சி...

நான் வலைப்பூவில் எழுதிய முதல் சிறுகதையை ஆடியோ ரீடிங் செய்து முயற்சித்துள்ளேன். கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்...



'கிரகணம்' ஆடியோ சிறுகதை... 

இந்த சாம்பிளை திறம்பட ரெக்கார்ட் செய்து இசையமைத்து கொடுத்த இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்-க்கும் குரல் கொடுத்த நண்பர்களுக்கும் நன்றி... இதை நாங்கள் 2010ல் ஒலிப்பதிவு செய்தபோது சிறியதாய் இருந்த VIBES என்ற ஸ்டுடியோ தற்போது NXG STUDIO என்று சகல அம்சங்களுடன் விரிவடைந்து.

இந்த சாம்பிளை, எனது நண்பர் ஒருவரிடம் போட்டுக்காட்டி கருத்து கேட்டேன். இது அவருக்கு மிகவும் பிடித்துப் போகவே, எனது இந்த சாம்பிளை தன்னுடன் எடுத்துச் சென்று, அவர் பணிபுரியும் ஆன்லைன் சர்வதேச புத்தக விற்பனை நிலையம் ஒன்றில் சொந்த முயற்சியில் போட்டுக் காட்டியிருக்கிறார். இப்போது அந்த நிறுவனம் எனது மற்ற சிறுகதைகளையும் ஆடியோ வடிவில் பதிவு செய்து, ஆடிய புத்தகமாக வெளியிட முன்வந்துள்ளதாக தெரிவித்தார். அதை சாம்பிளாக வைத்துக் கொண்டு மற்ற எழுத்தாளர்களிடம் போட்டுக்காட்டி அவர்களது எழுத்துக்களையும் ஆடியோவடிவில் கொண்டுவர முயல்வதாக கூறினார்... திரைப்பட வேலைகளின் நடுவே இதை எந்தளவுக்கு எடுத்து விரைவில் செய்ய முடியும் என்று தெரியவில்லை... இருந்தாலும் நிச்சயம் இந்த ஆடியோ கலாச்சாரத்தை கொண்டு வர நம்மாலான பங்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையுள்ளது.

எனது சுற்றுவட்டாரத்தில் எனக்கு தெரிந்தவர்கள் எழுதியுள்ள புத்தகங்களை ஆடியோ வெர்ஷன் செய்யுமாறு வலியுறுத்தி வருகிறேன். சிலர் முன்வந்து ஸ்க்ரிப்ட்-ஐ டிஜிட்டைஸ் செய்துக் கொண்டிருக்கின்றனர்...

நீங்களும் முயற்சிக்கலாமே..!


Signature

Saturday, April 07, 2012

எண்ணத்திரை : [சுஜாதா, மறைவாய் வாழ்கிறார்]

புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களை இப்போதுதான் தூசிதட்டி எடுத்து படிக்க ஆரம்பித்தேன். ஏனோ, வழக்கம்போல் முதலில் சுஜாதாவின் '21ஆம் விளிம்பு' சிக்கியது.

சுஜாதாவின் '21ஆம் விளிம்பி'ல் அவர் தமிழக அரசாங்க நிருபரின் சார்பாய் முன்னாள் பாரதப் பிரதமர் நரசிம்ம ராவ் அவர்களுடன் மேற்கொண்ட உலகச் சுற்றுப் பயணத்தைப் பற்றி படிக்க முடிந்தது... படித்து முடிந்ததும் நாமும் ஏதோ அந்த சுற்றுப்பயணத்தில் பங்கு பெற்றது போன்றதொரு உணர்வை மிக இயல்பாய் ஏற்படுத்தியுள்ளார்... ஒரு பகுதியில் சிங்கப்பூரை பற்றியும் மலேசியாவைப் பற்றியும் அவரது பார்வையையும், நம்மூரின் பல இயலாமைகளையும் வருத்தத்தோடு ஒப்பிட்டுள்ளார். இதிலிருக்கும் சில தகவல்களை 'அந்நியன்' பட விழிப்புணர்வு ஸ்பீச்சில் (அவரே) எழுதியிருப்பது தெரிகிறது. (உதாரணம் : 'சிங்கப்பூர்... பெங்களூரைவிட சிறிய ஊர் ஆனால்...'என்று வளரும் வசனம்.)


டி.என்.ஏ. பற்றி, கன்னடத் திரைப்படங்கள் பற்றி, தூர்தர்ஷனின் அப்போதைய (?) தரத்தைப் பற்றி, நாதஸ்வரத்தின் விலைகளும், அதை திறம்பட வாசிக்கும் வித்துவான்கள், அவர்கள் பிரயோகிக்கும் டெக்னிக்கல் வார்த்தை... ஜப்பான் பயணம், மலேசியா பயணம், சிங்கப்பூர் பயணம், பாரதியார் அரிதாய் பிரயோகித்த 'லிமரிக்' வகை கவிதைகள். இப்படி அள்ள அள்ள குறையாத அட்சயப்பாத்திரமாய் தகவல்கள் தளும்புகிறது.

அறியாத அறிவியல் தகவல்களை வழக்கம்போல் வாரிக் கொடுக்கும் வள்ளல் எழுத்துக்கு சொந்தக்காரர் சந்தேகமின்றி சுஜாதான். இப்புதகத்தை படித்து முடித்ததும் ஒரு விஷயம் புரிந்தது... சுஜாதா சார் நம்மைவிட்டு மறைந்துவிடவில்லை... மறைவாய் வாழ்கிறார்... அவரைக் காண விரும்புவோர் அவரது எந்தவொரு புத்தகத்திலும் பின்னட்டையில் காணலாம்... அவரிடம் பேச நினைப்போர் கேள்வியை மனதில் நினைத்துக் கொண்டு அவரது புத்தகத்தில் ஏதாவது ஒரு பக்கத்தை திறந்து படிக்கலாம். நிச்சயம் விடை கிடைக்கும்.


பெயர் : 21ஆம் விளிம்பு
எழுத்தாளர் : சுஜாதா
வெளியீடு : திருமகள் புத்தக நிலையம்
இப்புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக்கவும்







---------------------


Signature

Friday, April 06, 2012

அம்புலி 50வது நாள் நன்றியுரை

பிறை நிலவாய் பேப்பரில் இருந்த கதையை
திரைவடிவில் கொண்டுவர
தந்தையாய் உதவிய தயாரிப்பாளரான...
திரு. கே.டி.வீ.ஆர். லோகநாதன் சாருக்கு நன்றி..!

ரேஷன் கார்டில் எங்கள் பெயரில்லையே தவிர
அவர் குடும்பத்தவர்கள் நேசம் பாராட்டிய விதத்தில்
நாங்களும் அவர் குடும்ப அங்கத்தினரானோம்
அவர்கள் அன்புக்கும் அதரவுக்கும் நன்றி..!

எண்ணத்திரையிலிருந்த அம்புலியை
வண்ணத்திரைக்கு வரைந்து கொடுத்த
தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி..!

இதயத்துடிப்பில் வடித்த கதையைப்படித்து
உணர்வுகளேற்றி உயிரைக்கொடுத்து
நடித்துக் காட்டிய நடிகர்களுக்கு நன்றி..!

இப்படத்தின் தனித்தன்மையை கண்டறிந்து
'குடும்பச்சித்திரம்' என்று சான்று வழங்கி
தணிக்கைக் குழுவிற்கு நன்றி..!

வித்தியாச விளம்பர உத்திகளை
பேப்பர், டிவி, ரேடியோ, மொபைல், இண்டர்நெட் என்று
உரிய இடங்களில் உரக்கச் சொல்லி
உச்சம் தொட வைத்த
ஊடக நண்பர்களுக்கு நன்றி..!

நிறைகுறைகளை பக்குவமாய் சொல்லி
இப்படத்தின் வெற்றியை கணித்து
ஆருடம் சொன்ன
விமர்சகர்களுக்கு நன்றி..!

வியாபாரச் சந்தையில்
வெற்றிவியூகமமைத்து
விஸ்வரூப வெற்றிக்கு வழிவகுத்து கொடுத்த
விநியோகஸ்தர்களுக்கு நன்றி

அம்புலியை
அனைவரிடமும் கொண்டு சேர்த்து
ஐம்பது நாளைத் தாண்டி அரங்கமளித்து உதவிவரும்
திரையரங்க உரிமையாளர்களுக்கு நன்றி...

திருட்டு விசிடிக்கு குட்பை சொல்லி
திரையரங்குகளில், 3D கண்ணாடியணிந்து
குடும்பத்தோடு கண்டுகளித்த
பார்வையாளர்களுக்கு நன்றி..!

தான் உழைத்த பணம் கொடுத்து
படம் பார்த்து... பிடித்துப் போனதும்...
'படம் சூப்பராயிருக்கு... போய் பாருங்க..' என்று
வாய்வழி விளம்பரம் செய்து
மெய்வருத்தக் கூலி தந்த
அந்த முகமறியா ரசிகனைப் போன்ற ஒவ்வொருவருக்கும்
அம்புலி திரைப்படக்குழுவினரின் மனமார்ந்த நன்றி..!

மீண்டும் சந்திப்போம்

இப்படிக்கு அன்புடன்
ஹரீஷ் நாராயண் & "அம்புலி 3D" திரைப்படக் குழுவினர்


Signature

Thursday, April 05, 2012

எண்ணத்திரை : [பாதசாரிகளும்... பங்குனி உத்திரமும்...]


டெக்டானிக் தட்டுக்கள், கண்டங்களை ஒன்றாய் இணைத்திருந்த காலம் தொட்டு மனிதன் நடந்து நடந்து, இந்த நடைபயண கலாச்சாரம் நம் பரிணாமத்தின் முக்கிய அங்கமாய் இருந்து வந்துள்ளது...

ஆனால் இன்றோ, பக்கத்து கடைக்கு சென்று நூடுல்ஸ் வாங்குவதாய் இருந்தாலும், பைக்கிலோ அல்லது காரிலோ சென்று வாங்கி வருமளவிற்கு விஞ்ஞானம் உச்சம் கண்டுள்ளது. விளைவு..? நடப்பதற்கும் ஒரு நேரம் ஒதுக்கி, நடப்பது போல் செயற்கையாய் பரபரப்படைந்தபடி நடக்கிறோம்.

சென்ற வாரம் ஞாயிறன்று அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருக்கும்போது வழியெங்கிலும் இடதுமபக்கமாய் மஞ்சள் உடையணிந்த பாதசாரி பக்தர்கள் கூட்டம் பங்குனி உத்திரத்தன்று திருத்தணிகை கோவிலில் இருப்பதற்காய் நடந்துக் கொண்டிருந்ததை கண்டேன்.

முன்பெல்லாம், இது போன்ற நடைபயணம் தேவைதானா என்று நான் எண்ணியதுண்டு... ஆனால், அதிலிருக்கும் ஒரு மன ரீதியான ரிஃப்ரெஷ்மெண்ட்-ஐ பற்றி அறிந்துக் கொள்ள சமீபத்தில் நான் படித்த இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் 'என் யாத்திரை அனுபவங்கள்' என்ற புத்தகத்தகம் வழிவகுத்தது...

நமது இயந்திர வாழ்விலிருந்து நம்மை நாமே விடுவித்து மீண்டும் புதிய தெம்புடன் இணைத்துக் கொள்ள இதுபோன்ற நடைபயணங்கள் வழிவகுக்கும் என்று அவரது அனுபவ எழுத்து மூலம் அறிந்துக் கொள்ள முடிகிறது.

யாத்திரை எம்மாதிரியான உணர்வை ஏற்படுத்தும், எப்போது சோர்வு தட்டும், எப்போது சொர்க்கம் கிட்டும், அந்நியர் நட்பின் மேன்மைகள். பயணத்தின்போது உடல்ரீதியான விளைவுகள், இதனால் வாழ்வில் ஏற்படக்கூடிய மனரீதியான மாறுதல்கள்... நம்பிக்கைகள்... வழியில் ஏற்படக்கூடிய எதிர்பாரா திருப்பங்களின் த்ரில்... இப்படி வெறும் நடைபயண அனுபவத்தின் அற்புதத்தை, ஆன்மீக ரீதியாய் சொல்லி உணர வைக்கிறார் இந்திராஜி.

அவர் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல் சில மனிதநேய காட்சிகளை அந்த பங்குனி உத்திர பக்தர்களின் பயணத்தில் பார்க்க முடிந்தது...

அந்த பக்தர்கள் நடக்கும் பாதையில் வெயிலின் வீச்சு அதிகம் இருப்பதால் சிலர் தத்தம் வாசலில் (பக்தர்கள் கடந்து போகும் தடத்தில்) நிழலுக்காக பந்தல் போட்டிருந்தனர்.. சிலர் வீட்டு வாசலில் இலவச மோர் மற்றும் ஐஸ் வாட்டர் விநியோகம் செய்தனர். சில கடைவியாரிகள் வாழைப்பழத்தை விநியோகம் செய்தனர். இதற்கெல்லாம் வசதியில்லா சிறுவீட்டவர்களும் தன் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கடந்து செல்லும் பாதசாரிகளின் பாதத்தை குளிர்வித்தனர்... இப்படி அவரவர் வசதிக்கேற்ப மனதிநேயத்தை கடம்பிடிப்பதை பார்க்க அந்த வெயிலிலும் குளிர்ச்சியாய் உணர முடிந்தது... 

இது அந்த காலத்து ஷேத்திராடனம் போல்தான் என்றாலும் கோவிலுக்குத்தான் போக வேண்டுமென்றில்லை... அவரவர்க்கு சற்றே தூரத்திலிருக்கும் கேளிக்கை இடத்திற்கும் நடைபயணமாய் நண்பரகளுடன் சென்று வந்தால் நலம்.

வருடம் ஒருமுறையாவது, கேமிரா துணையுடன் நண்பர்களின் குழுமத்தோடு சேர்ந்து நல்ல அரட்டை அடித்துக் கொண்டு Bag-Pack மாட்டிக்கொண்டு வழியில் தோன்றும் இடத்தில் தங்கிக் கொண்டு மீண்டும் எழுந்து நடந்து போய்க்கொண்டேயிருந்து இலக்கை அடைவது நிச்சயம் நல்லதொரு அனுபவத்தை கொடுக்கும் என்றே தோன்றுகிறது...

சமீபத்தில் அதிகமாகி வரும் பைக் ட்ரிப்... ஜீப் ட்ரெக்கிங் என்று அவரவர் வசதிக்கேற்ப சில பயணங்களை மக்கள் மேற்கொண்டு வருகிறார்கள்... இதே போல் நிச்சயம் எதிர்காலத்தில் எல்லா வர்க்கத்தினரும் மேற்கொள்ளக் கூடிய 'வாக் ட்ரிப்'கள் துவங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.. என் நண்பர்களிடமும் இது பற்றி விசாரிக்கவிருக்கிறேன்...


மேலும் விவரங்களுக்கு இதுதான் அந்த புத்தகத்தகம்


எழுத்தாளர்:இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம்:திருமகள் நிலையம்



ஒரு குட்டி கோ-இன்சிடென்ஸ்... இந்த புத்தகத்தை நெகிழ்ச்சியுடன் படித்து முடித்துவிட்டு டிவியை ஆன் செய்தால் அதில் சிவாஜி சார்.. 'ஆறு மனமே ஆறு... அந்த ஆண்டவன் கட்டளை ஆறு..' என்று பாடுகிறார்... நடந்துக் கொண்டே...


Signature

Wednesday, April 04, 2012

உலக மொழிகளில் 'அம்புலி'

அம்புலு... (எழுத்துப்பிழையல்ல..)

அம்புலி வெளியாகி 48ஆம் நாளான இன்று, ஒரு குட்டி நற்செய்தி... 'அம்புலி' படம் தெலுங்கு பேசவிருக்கிறது... இக்கோடை விடுமுறையில் தெலுங்கு தேசத்தில் அம்புலியை டப் செய்து வெளியிடவிருக்கிறோம். டப்பிங் பணிகள் இன்னும் சில தினங்களில் துவங்குகிறது. படத்திற்கு தெலுங்கு டைட்டில் அம்மொழியில் ஸ்க்ரிப்ட் எழுதுபவர்களிடம் கேட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும்... இருந்தாலும் சும்மா நம்ம அஸிஸ்டெண்ட்-களிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று கேட்டதற்கு ஒரே கோரஸாய்... இப்பத்தியின் தலைப்பைத்தான் சொன்னர்கள்... அதென்ன? தெலுங்கு என்றாலே 'லு' சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று எழுதப்படாத விதி (தப்பாக) பரவிவிட்டது...  அப்படியென்றால் கீழ்கண்ட ஆங்கிலப்படங்களுக்கு தெலுங்கில் என்ன டைட்டில் வரும்..? ஒரு சின்ன கற்பனை...
  • SUCKER PUNCH : சக்கர் பஞ்சுலு
  • KUNG FU PANDA : குங்ஃபூ பேண்டாலு
  • DARK KNIGHT : டார்க் நைட்டுலு
இது போன்ற எழுதப்படா விதிகளில் "அம்புலி"க்கு மற்ற மொழிகளில் டைட்டில் வைத்தால் எப்படி வரும்...

ஆங்கிலத்தில் 'ஆம்ப்ளி'
ஹிந்தியில் 'ஹே ஹம்புலி'
கேரளாவில் 'அம்பிலியானு'
கன்னடாவில் 'அம்புஹள்ளி'
சமஸ்கிருதத்தில் 'ஹம் புஹஸ்வ ளின்ய'
சைனீஸில் 'யங்ம் புங் லீ'
ஸ்பானிஷ் 'ஆம்ப்யூளீட்டா'
ஃப்ரென்ச் 'லே ஆம்ப்லெ'

சும்மா வேடிக்கைக்காகத்தான்..!!! யாரும் கோபித்துக் கொள்ள வேண்டாம். 'அம்புலு'வின் நிஜமான தெலுங்கு டைட்டில் என்னவென்று விரைவில் பகிர்கிறேன்.


Signature

Monday, April 02, 2012

ஒரு பெண்... ஒரு பூச்சி... [சிறுகதை]






ரந்து விரிந்திருந்து அந்த மணற்பரப்பில் திடீரென்று விழுந்த ஒளிக்கீற்றில் இரண்டு நிர்வாண உடல்கள் பொத்தென்று விழுந்தது...


விழுந்தவர்களில் ஒரு ஆண் ஒரு பெண்... இருவரும் அசிங்கமில்லாத முழு நிர்வாணக் கோலத்திலிருந்தனர்... ஒருவரையொருவர் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டனர்... சுற்றிலும் வெற்று மணலும், ஆங்காங்கே முளைத்திருந்த காட்டுச்செடிகள் கரிய நிழலும் தெரிந்துக் கொண்டிருந்தது...


இருவரும் வெவ்வேறு திசையில் ஓடிப்போய் அந்த காட்டுச்செடிக்குப்பின்னால் மறைவாய் நின்றுக் கொண்டனர்.. சுற்றும் முற்றும் பார்த்தனர்... 


அந்த இடம், ஏதோ ஆறு ஓடும் தடம்போல் தோன்றியது...


அந்த ஆண்... அந்த இடத்தை அறிந்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தான்... பார்வையால் தூரங்களை அளந்தான்... வெகு தொலைவில் ஒரு ஓலைக்குடிசை மட்டும் தெரிந்தது...


அந்த பெண்ணைப் பார்த்து... அந்த குடிசைக்கு போகலாம்... என்று சைகை செய்தான்


இருவரும் அந்த குடிசையை நோக்கி ஓட ஆரம்பித்தனர்...
--------------------


குடிசைக்குள்... ஒரு லாந்தர் விளக்கு மிகவும் குறைவான வெளிச்சத்துடன் எறிந்துக் கொண்டிருந்தது...  தரையில் ஒரு மூதாட்டி உறங்கிக் கொண்டிருந்தாள். அவளுக்கருகில் ஒரு நாய் உறங்கிக் கொண்டிருந்தது...


ஏதோ உள்ளுணர்வால், திடீரென்று அந்த நாய் விழித்துக் கொண்டது... குடிசையின் பின்வாசலைப் பார்த்து குரைத்தது...


'வௌவ்... வௌவ்...' என்ற பயங்கர குரைத்தலைக் கேட்டு பாட்டி திடுக்கிட்டு கண்விழித்தாள்.


தூக்கம் கலைந்த பாட்டி, 'ஏய் மணி... கம்முனக்கட..' என்று அதட்டியபடி மீண்டும் உறங்க எத்தணித்தாள்


நாய் விடாமல் குரைத்துக் கொண்டிருக்கவே... எழுந்து சென்று பின்வாசல் பக்கம் நோட்டம் விட்டாள்... நாய் அவளுக்கு முன்பாய் தாவிச் சென்று வெளியே ஒரே திசையைப் பார்த்து குரைத்தது... 


வெளியே துணி காயவைக்கும் கம்பியைப் பார்த்த அந்த மூதாட்டி  'அடப்பாவிகளா... கனவாணிப்பசங்களா... எம் புடவையை கொண்டு போய்ட்டீங்களா..' என்று புலம்ப ஆரம்பிக்க...


'இல்ல பாட்டி... நான்தான் எடுத்தேன்... மன்னிச்சிக்குங்க' என்று ஒரு இனிமையான பெண்ணின் குரல் கேட்டது.. குரல் வந்த பக்கமாய் பார்த்து நாய் மீண்டும் வெறியுடன் குரைக்க...


'ந்தா.. மணி... சும்மாயிரு...' என்று அந்த பாட்டி குரல் வந்த பக்கமாய் பார்வையை கூர்மையாக்கினாள்  அங்கே ஒரு அழகான இளம்பெண் தனது சேலையை வெறுமனே சுற்றியபடி உடல்மறைத்து இருட்டில் நின்றிரு்நதாள்...


'யாரும்மா நீ..' என்று அந்த இளம்பெண்ணைப் பார்த்து பாட்டி கேட்க... புடவையை  கட்டத்தெரியாமல் வெறுமனே சுற்றியிருந்த அந்த அழகான பெண் அருகில் வந்தாள்...


பாட்டி குழப்பத்துடன் 'இந்நேரத்துல தனியா இங்கென்னம்மா பண்றே..'


'அவ தனியா இல்ல பாட்டி... நானும் கூட இருக்கேன்..' என்றபடி அந்த பெண்ணுக்குப் பின்னால், அவளுடன் வந்த ஆணும், நிர்வாணக்கோலத்தில் தன்னை மறைத்தபடி எட்டிப்பார்த்தான்.


நாய் மீண்டும் குரைத்தது...


பாட்டியின் கண்கள் குழப்பத்தில் விரிந்தது...
-------------------------


குடிசைக்குள் விளக்கு பிரகாசப்படுத்தப்பட்டிருக்க... அந்த ஆணும் பெண்ணும் பழைய சோற்றை குழைத்து பசியாறிக் கொண்டிரு்நதார்கள்... பாட்டி இவர்கள் வெறியுடன் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டிருந்தாள்.


'யாருப்பா நீங்க..?'


'என் பேரு கவின்... இவ மின்மினி...'


'ரெண்டு பேரும் காதலிச்சி வூட்டை வுட்டு ஓடி வந்துட்டீங்களா..?'


'ஆமா.. பாட்டி...' என்று வாயில் பழைய சோற்றுடன் கவின் பதிலளித்தான்...


'ஏன் இப்படி அம்மணக்கட்டையா சுத்திட்டிருக்கீங்க... யாராவது வழிப்பறி பண்ணிட்டாங்களா..?' என்று பாட்டி கேட்க


'இல்ல பாட்டி.. சொன்ன நீங்க நம்பமாட்டீங்க... நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் உசுருக்குசுரா காதலிச்சோம்... ஒரு நாள் ராத்திரி எங்களை வேற்றுகிரகவாசிகள் கடத்திட்டாங்க..'  என்று அதிர்ச்சியுடன் மின்மினி கூறினாள்...


பாட்டி ஏளனச்சிரிப்புடன் 'என்ன..? வேற்றுகிரகவாசிகளா..?' என்றாள். இவர்கள் பேசுவது புரியாமல் நாய் மூவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தது...


'ஆமா பாட்டி... நான் சொல்லலை நீங்க நம்பமாட்டீங்கன்னு..?!'


அவளைத் தொடர்ந்து கவின், 'ஒரு வாரம் செவ்வாய் கிரகத்துல வச்சிருந்து என்னென்னமோ சோதனை செஞ்சாங்க... அப்புறம் இன்னிக்கு கொண்டாந்து விட்டுட்டாங்க..'


'ஒரு வாரமா வேற கிரகத்துல இருந்தீங்களா..? அதான் இந்த பழைய சோத்த இப்படி துண்றீங்களா..?அங்க என்ன துண்ணீங்க..?' என்று பாட்டி கேட்க


'ஏதோ நீலக்கலர்ல... பாதி திரவமா கொடுத்தாங்க.. அதை நினைச்சாலே..! உவ்வே..!' என்று மின்மினி கூறும்போதே வாந்தி எடுத்தாள்...


பாட்டி திடுக்கிட்டாள்...


'என்னப்பா... பொண்ணு மசக்கையா..?' என்றவள் கவினைப் பார்க்க...


அவன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ஒரு சின்ன மௌனத்திற்கு பின், 'இருக்கலாம்...' என்றவன் சந்தேகத்துடன் கூறி மீண்டும் சாப்பிடத் துவங்கினான்...


'செவ்வாய் கிரகத்துல ரெண்டு பேரும் கூடுனீங்களா..?'


'கூடச்சொன்னாங்க... 7 நாளும் கூடவெச்சாங்க..! இது என்ன இடம் பாட்டி..?' என்றான்


'செந்தூரம் கிராமம்'


'பக்கத்துல பெரிய ஊர் என்னயிருக்கு.?'


'பூந்தமல்லி...'


'நல்ல வேளை பக்கம்தான்... நாங்க ஆவடி பக்கத்துல சேக்காடுக்கு போகணும்... எங்க வீட்டுல என்ன களேபரமோ தெரியல... 7 நாளா எங்களை காணாம போலீசுக்கு போயிருந்தாலும் போயிருப்பாங்க...'


'இந்நேரத்துல வேண்டாம் கண்ணு... ரெண்டு பேரும் விடிஞ்சதும் கிளம்புங்கய்யா...' என்று கரிசனத்துடன் அந்த பாட்டி கூறியதை கவின் ஏற்றுக் கொண்டான்


'சரி பாட்டி..' என்றவன் மின்மினியைப் பார்க்க, அவளும் சரி என்று நன்றியுடன் தலையசைத்தாள்...


---------------


அடுத்த நாள்...


ஒரு ஃப்ளாட்டில் ரேடியோவில் 'தர்மயுத்தம்' படத்தில் இடம்பெற்ற ரஜினிகாந்த்  நடித்த பழைய பாடல் ஓடிக்கொண்டிருந்தது...


'ஒரு தங்க ரதத்தில்... பொன்மஞ்சள் நிலவு... ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு...'


இதை கேட்டுக் கொண்டே, நைட்டி அணிந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி, தனது நரைத்த தலைமுடியை கையில் கோதியபடி வீட்டுக் கதவைத் திறந்தாள்... வெளியே நியூஸ் பேப்பரும் பால் பாட்டிலும் இருந்தது... அதை எடுக்க குனிந்து மீண்டும் நிமிரவும் எதிரில் கவினும், மின்மினியும் நின்றிருந்தனர்... 


கவினைக் கண்ட அந்த நடுத்தர வயது பெண்மனிக்கு முகத்தில் ஏகப்பட்ட குழப்ப ரேகைகள் தோன்றியது.. 'நீங்க.. நீ..' என்று அவள் கண்கள் அதிர்ச்சியின் உச்சத்திற்கு புருவம் உயர்த்த... 'கவின்... அண்ணா...' என்று கத்தியே விட்டாள்...


கவினும் குழப்பத்துடன் அவளைப் பார்த்து கண்கள் விரிய... அவள் கண்கள் சொறுகி மயக்கம் வந்து விழப்போனாள். மயங்கிவிழுவதைப் பார்த்து கவினும், மின்மினியும் அவளை கைத்தாங்களாய் பிடித்துக் கொண்டு ஒருத்தரை ஒருத்தர் பயத்துடன் பார்த்துக் கொண்டனர்...


வீட்டிற்குள்ளிருந்து அந்த பெண்ணின்  கணவர்.. ஓடிவந்து.. 'ஹே... ஹேமா என்னாச்சு... டேய்.. யார் நீங்க...' என்று அருகிலிருந்த கவினையும் மின்மினியையும் பார்த்து கேட்க...


'சார் இவ என் சிஸ்டர்தான்... ஹேமலதா..' என்று கவின் கூறினான்...


'என் பொண்டாட்டிக்கு தம்பி யாரும் இல்லியே...' என்று கணவன் குழம்பினான்


'நான் தம்பியில்ல சார்... இவளோட அண்ணன்..' என்றான்...


கணவன் குழப்பத்துடன் தனது மனைவியையும் கவினையும் மாறி மாறி பார்த்தான்... ஆனால் கவின் குழப்பத்துடன் மயங்கி கிடக்கும் பெண்ணைப் பார்த்து 'இவ என் தங்கைதான்... ஆனா, ஏன் இப்படி வயசானமாதிரியிருக்கா..?' என்று கேட்க ஹேமாவின் கணவன் அவளை ஏற இறங்க பார்த்தான்....


------------


சற்று நேரத்தில் அந்த வீட்டினுள் கவின் ஆச்சர்யத்துடன் நியூஸ் பேப்பரைப் பார்த்துக் கொண்டிருந்தான். அருகில் மின்மினி அமைதியாகவும், ஹேமாவின் கணவன் குழப்பமாகவும் அமர்ந்திருக்க, ஹேமா சோஃபாவில் கிடத்தப்பட்டிருந்தாள்...


கவின் புலம்பினான் 'இப்போ வருஷம் 2040-ஆ... என்னால நம்பவே முடியல சார்... நானும் மின்மினியும் காணாம போனது 2013ல, நாங்க தொலைஞ்சி போய்  7 நாள்தான் சார் ஆச்சு.. ஆனா...'


'நீங்க சொல்றது ஒண்ணும் எனக்கு புரியல...' என்று அந்த கணவன் இன்னும் கடுப்பாகவே இருந்தான்


'சார்.. நான்தான் சொல்றேனே... நான் ஹேமாவோட அண்ணன்... 7 நாளுக்கு முன்னாடி என் லவ்வரோட செவ்வாய் கிரக வாசிங்களால ரெண்டு பேரும் கடத்தப்பட்டோம்... எ ப்யூர் அப்டக்ஷன்...  7 நாள் எங்களை செவ்வாய் கிரகத்துல வச்சிருந்துட்டு இப்போ கொண்டுவந்து விட்டுட்டாங்க.. இங்க வந்து  பாத்தா... 27வருஷமாச்சுன்னு சொல்றீங்க... ஹவ் கம் சார்..?' என்று கவின் புலம்பினான்


இதற்குள் ஹேமா மெல்ல கண்விழித்தாள்...


'அண்ணா... கவின் அண்ணா..? எப்படின்னா இருக்கே..?' என்று கவினையும் மின்மினியையும் மாறி மாறி பார்த்தபடி அழுகையுடன் கேட்டாள்... கவின் எழுந்து சென்று அவளைக் கட்டிக் கொண்டான்.


'ஹேமா... இப்பவாவது என்னை கண்டுபிடிச்சியே... நான் நல்லாருக்கேம்மா... நீ எப்படி இருக்கே..! அப்பா அம்மா. எங்க?' என்றவன்  கேட்க


'ரெண்டு பேரும்..!' என்று அவள் மேற்கொண்டு சொல்ல முடியாமல் மீண்டும் அழத்துவங்க்கினாள்... அவளது கணவன் தொடர்ந்தான்...


'அவங்க ரெண்டு பேரும் அமர்நாத்துக்கு டூர் போனவங்க... அங்க லேண்ட்ஸ்லைட்ல மாட்டிக்கிட்டு இறந்துட்டாங்க...' என்றான்


'ஓ...' என்று கவினும் சோர்ந்தான்... மின்மினி அவனை தேற்றினாள்


'அழாதேப்பா..' என்று ஆறுதல் கூறினாள்... அவன் அவளைக் கட்டிக்கொண்டான்.


'நீ எப்டீண்ணா அப்படியே இருக்கே..! மின்மினியும் அப்படியே இருக்காங்க... நீங்க ரெண்டு பேரும் திடீர்னு ஓடிப்போனதும் நான் எவ்ளோ அழுதேன் தெரியுமா..?'


'நாங்க ஓடிப்போலேமா... எங்களை கடத்திட்டாங்க..?'


'யார்ணா..?'


'செவ்வாய் கிரகத்து ஆளுங்க..'


'என்னண்ணா சொல்றே..?'  என்றாள்... இதற்குள் அந்த அறைக்குள் ஒரு இளம்பெண் நுழைந்தாள்... அனைவரதுஉ கவனமும் அவள் மீது திரும்பியது...


ஹேமா அவளைப் பார்த்ததும் உற்சாகமாக... 'வீணா..?! இதுதான் உன் மாமாடி..! ஃபோட்டோல காட்டுவேனே..! ஞாபகமிருக்கா..? அண்ணா... இது என் பொண்ணுண்னா, வீணா... 25 வயசாகுது...' என்று கூறினாள்...


அவள் கவினை ஆழமாய் பார்த்தாள்... அவனுக்கு 22 வயதுதான்...


'இவர் என் மாமாவா... லவ் பண்ணி ஓடிப்போனதா சொல்லுவியே இவர்தானா அது..? யூ ஆர் சோ யங் டு பீ மை மாமா...  இவங்கதான் உங்க கேர்ள்ஃப்ரெண்டா... சோ க்யூட் அண்ட் யங்... ஹாய்..' என்றாள்


மின்மினியும் பதிலுக்கு  'ஹாய்' என்றாள்...


அவள் மேற்கொண்டு அங்கு நிற்காமல், 'ஐம் கெட்டிங் லேட் ஃபார் மை காலேஜ்... சீ யூ கைஸ் இன் தி ஈவ்னிங்... வந்ததும் உங்க லவ் ஸ்டோரிய நிச்சயம் எங்கிட்ட சொல்லனும் மாமா... பாய் ஆல்... பாய் மா' என்று கூறிவிட்டு பதிலுக்கு காத்திராமல் வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு வீல்-ஐ எடுத்து நான்காய் திறக்க அது சைக்கிளாகிப் போனது... அதை தோளில் தூக்கிக் கொண்டு ஏதோ ஆங்கிலப்பாடலை முணகிக் கொண்டே படியிறங்கினாள். 


ஹேமா வியந்தாள்... இது என்ன குழப்பம்... தன் பெண்ணுக்கு தன் அண்ணனைவிட மூன்றுவயது அதிகம்... அடக்கடவுளே..! எப்படி மாறியது இந்த கணக்கு என்று பயந்தாள்...


உடனே வீணா மீண்டும் உள்ளே எட்டிப்பார்த்து 'ம்மா.. சொல்ல மறந்துட்டேன்... கரண்ட் கார்டு ஃரேடியோவுக்கு மேல வச்சிருக்கேன்... அப்பா இன்னிக்கு மறக்காம ரேஷனுக்கு போய் ரீசார்ஜ் பண்ணிட்டு வந்துருங்க...'என்று மீண்டும் அங்கிருந்து மறைந்தாள்


மின்மினி குழப்பத்துடன் அந்த அறையை பார்த்துக் கொண்டிருந்தாள். கவின் பேப்பரில் 'கன்னித்தீவு' படித்துக் கொண்டிரு்நதான்...


'1. சிந்துபாத்  பாறை வடிவிலிருந்த அந்த அரக்கனை அடையாளம் கண்டுகொண்டான்... 2. அருகில் சென்று அந்த பாறையை மலையிலிருந்து உருட்டி கீழேயிருக்கும் கடலில் தள்ளிவிட்டான்... 3. பாறை கீழேவிழுந்து வெடித்துச் சிதறியது... 4. 'ஹா..ஹ்..ஹா... என்னை ஏமாற்ற பார்த்தாயா.. என்று சிந்துபாத் வீரத்தோடு சிரித்தான் (தொடரும்)' என்றது கன்னித்தீவு...


ஹேமா கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தாள் 'கொஞ்சம் இருங்க நான் குடிக்க காஃபி கொண்டு வர்றேன்...' என்று எழுந்தாள்


கவின் அவளிடம், 'ஹேமா... டிவி போடேன்...'


'இல்லண்ணா... டிவியெல்லாம் அவுட் ஆஃப் டேட், ஸோலார் ரேடியோதான்... இப்போ எல்லாமே சோலார் சோர்ஸ்தான்... பவர் ரொம்ப ரேஷன்... ஃபேண் போடுலாம்னு பாத்தா இப்போபாத்து கரண்ட் தீந்துடுச்சு... இன்னிக்கி ரேஷனுக்கு போய் கரண்ட் கார்ட்-ஐ ரீசார்ஜ் பண்ணாத்தான் வீட்டுல ஃபேன்கூட சுத்தும்... என்னங்க.. வீணா சொன்னமாதிரி'


'ஆங்.. ஆங்.. போறேன் போறேன்...' என்று அவள் கணவன் புரிந்துக் கொண்டு பதிலளித்தான்.


'என்னது கரண்ட்டு ரேஷன்ல வாங்கணுமா..?' என்று மின்மினி கேட்டாள்


இதுவரை அமைதியாயிருந்த ஹேமாவின் கணவன் 'ஆமா மச்சான்... ஒரு வீட்டுக்கு மாசத்துக்கு 30 மணி நேரம்தான் கரண்ட்... எல்லாம் ரேஷன்தான்... எப்பபெப்போ வேணுமோ அப்பப்போ கரண்ட் கார்டு ஸ்வைப் பண்ணி யூஸ் பண்ணிக்க வேண்டியதுதான்... இருங்க உங்க ரெண்டு பேருக்கும் நல்ல ட்ரெஸ் எடுத்துட்டு வர்றேன்...' என்று ஹேமாவின் கணவரும் அங்கிருந்து எழுந்து சென்றார்... கவினும் மின்மினியும் ஒருவரையொருவர் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டனர்...


-----------------


அன்று மாலை வீணாவும், கவினும், மின்மினியும், அந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் நின்றிருந்தனர்... சுற்றித்தெரிந்த  அத்தனை கட்டிடங்களும் உயரமான கோபுரங்களுமென்று கொஞ்சம் கூட சீரில்லாத குப்பைக்களங்கள் போலிருந்தது... ஒரே நல்ல விஷயம்... எல்லா மாடியிலும் கண்ணாடிக்கூண்டு போன்று ஒரு சிறு பகுதியில் எல்லோரும் செடிகளை வளர்த்து ஒரு குட்டிப்பூங்கா போன்ற அமைப்பு சீராய் அமைந்திருந்தது... ஆனாலும், சுற்றுச்சூழலின் அசுத்த தன்மை, ஒருவித மாசுப்படிந்த கலரை சென்னை நகரத்துக்கு கொடுத்திருந்தது... இதனால் அந்த நகரம் மொத்தமாய் பார்க்க ஒரு அழுக்கான கார்ப்பரேட் சேரி போல காட்சியளித்தது...


வீணா தனது பெற்றோர்களின் கல்யாண ஆல்பத்திலிருந்து தனது பெர்சனல் ஆல்பம் வரைக்கும் கவினுக்கும், மின்மினிக்கும் காட்டிக்கொண்டிருந்தாள்...


கவின் ஆவலாக அந்த ஆல்பத்தை பார்த்துக் கொண்டிருந்தான்... மூவரும் சிரித்தபடி அந்த ஆல்பத்தை முழுவதுமாக பார்த்து முடித்திருந்தனர்...


வீணா மின்மினியைப் பார்த்து, 'என் ட்ரெஸ்ல என்னைவிட நீங்கதான் ரொம்ப அழகாயிருக்கீங்க மினி... உங்களை மினின்னு கூப்பிடலாம்லா..?' என்றாள்... பதிலுக்கு மின்மினி ஒரு சிரிப்பை உதிர்த்தாள்... 


வீணா மீண்டும் கவினிடம் திரும்பி 'என்ன மாமா, இவங்க இப்படி வெட்கப்படுறாங்க... இப்படி பேசாமலே இருந்தும் எப்படி உங்களை கவுத்தாங்க..?'


'ஃபேஸ்புலதான்..!!! வீட்டுக்கு பக்கத்துலியே இருந்தாளும் இவளை நேர்ல பாத்து பேசுனதைவிட, ஃபேஸ்புக்லதான அடிக்கடி பாத்து Chat பண்ணுவோம்... இவளோட ஃபோட்டோஸை மணிக்கணக்கா உத்துப் பாத்துட்டிருப்பேன்' என்றான் கவின்


'ஃபேஸ்புக்கா... யூ மீன் தட் ஓல்டு சோஷியல் நெட்வெர்க் சைட்..?'


'ஃபேஸ்புக் ஓல்டா.. இப்போ இல்லியா..?' என்றாள் மின்மினி


'உங்களுக்கு புரியற மாதிரி சொல்லணும்னா, ஃபேஸ்புக்லாம் இப்போ சுதேசமித்திரன் மாதிரி அதரப்பழசு...' என்றாள்


'ஓ இப்போ மொபைலாவது இருக்கா இல்லியா..?' என்று மின்மினி ஆச்சர்யமாக கேட்டாள்....


'யூ மீன் கைல தனியா ஒரு பீஸை வச்சுக்கிடு டயல் பண்ணி பேசுவீங்களே அதுவா..? நோ... வே..!'


'அப்போ நீ எப்படி பேசுவே..' என்று கவின் கேட்டான்.


'வெயிட்...' என்று நிமிர்ந்தவள்... 'ஒமேகா... வேக் அப்' என்றதும் தனது கழுத்தில் மாட்டியிருந்த டாலர் சமாச்சாரத்திலிருந்து ஒரு ஒளிப்பிழம்பு அவளுக்கு எதிரில் காற்றில் ப்ரொஜெக்ட் ஆகி திரைபோல் காட்டியது...


'கால் ரூடி...' என்றாள்.  தன் கழுத்துக்கெதிரில் இருந்த திரையில் இரண்டு மூன்று பெயர்கள் வந்து நின்றது... ஜான் ரூடி, ரூட்யார்ட் கிப்ளிங்... என்று திரை காட்டிஇயது... 'நோ.. நோ..  ரூடி அலியாஸ் ருத்ரமூர்த்தி' என்றாள்


உடனே மறுமுனையில் ரூடி என்ற பெயருக்கு சற்றும் பொறுந்தாத ஒரு இளம் வழுக்கு மண்டையன் பேசினான்


'ஹே வீணா... வணக்கம்' என்றான்


'வணக்கம் ரூடி... என்னடா பண்றே..?'


'இன்னிக்கு என் சிறுகதை ரேடியோல வருது...  கேட்கிறதுக்காக காத்துட்டிருக்கேன்...'


'நல்ல வேளை ஞாபகப்படுத்தினே..!'


'நீயும் கேக்கப்போறியா..?'


'இல்ல... உன் கதை வருதுன்னு சொன்னதால ரேடியோ கிட்டயே போவமாட்டேன்...'


'ஹே.. கமான் வீணா... அவ்ளோ ஒண்ணும் மோசமா இருக்காது..'


'ஓகே.. வில் ட்ரை... நன்றி வணக்கம்..' என்று அவன் திரையிலிருந்து மறைந்ததும் 'ஒமேகா  ஸ்லீப்' என்றாள்... உடனே திரை மறைந்து, மீண்டும் அவள் கழுத்தில் டாலர் மட்டும் தொங்கிக்கொண்டிருந்தது...


கவினும் மின்மினியும் ஏதோ மேஜிக் பார்த்தவர்கள் போல ஒருவரை ஒருவர் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டனர்...


'ஓகே... இப்போ சொல்லு கவின் மாமா... உங்க லவ் ஸ்டோரி என்ன..?' என்று வீணா இருவர் பக்கமாய் திரும்பி கேட்டாள்
----------------------


அதே நேரம்... அவர்கள் வீட்டுக்குள் பெட்ரூமில் ஜன்னலோரம் அமைந்திருந்த இரட்டை நாற்காலியில் ஹேமாவும் அவளது கணவனும் அமர்ந்துக் கொண்டிருக்க... ஹேமா தன் கணவனிடம் பேசிக்கொண்டிருந்தாள்...


'இவங்க ரெண்டு பேரும் தொலைஞ்சி போனது 2013ல, அப்போ மலிவு மின்சாரத்துக்கு பற்றாக்குறை வந்து, தினமும் விட்டு விட்டு 15 மணி நேரம் பவர் கட் பண்ணுவாங்களே நினைவிருக்கா...'


'ஆமா தெரியும் எங்க ஏரியாவுலயும் பண்ணுவாங்களே...  போராட்டமெல்லாம் நடந்தது. ஆனா அப்போக்கூட ஒரு நாளைக்கு தாராளமா 10 மணி நேரம் கரண்ட் இருந்த்து... இப்போதான்... !' என்று கணவன் அவளை ஆமோதித்தான்


'ஹ்ம்... அப்போ இங்க எல்லாமே தனித்தனி வீடுங்களா இருந்தது... எல்லாரும் ஈவ்னிங் கரண்ட் ஆஃப் ஆனதும்... மாடியில வந்து ஒண்ணுக்கூடுவோம்...'
---------------------


மாடியில் இதே விஷயத்தை மின்மினியும் வீணாவிடம் விளக்கிக் கொண்டிருந்தாள்...


'எல்லாரும் மாடியில ஜாலியா பேசுவோம்... பாட்டுக்கு பாட்டு விளையாடுவோம்... ராத்திரி நிலாச்சோறு சாப்பிடுவோம்.. இப்படி எங்க ஏரியாவே கரண்ட் கட்-ஐ தனக்கு சாதகமா மாத்திக்கிட்டு அனுபவிச்சிட்டிருந்தோம்...'


கவினும் தொடர்ந்தான், 'எனக்கு பக்கத்து வீட்டுல இருந்த இவ மேல லவ் ஆயிடுச்சு... எனக்கு இவகிட்ட ரொம்ப பிடிச்சதே இவ பேருதான்... மின்மினி... கரண்ட் கட் ஆனாலும், இருட்டுல அவ்வளவு பிரகாசமா தெரியுற முகம்.. ஆப்தான பேரு... இவளுக்கு பேரு வச்சவங்க செம்ம கில்லாடி... எப்படியோ இவளுக்கும் என்னை பிடிச்சு போச்சு...'


'ஓ... சோ ரொமேண்டிக் மாமா' என்று வீணா ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தாள்...
------------------


அறையில் ஹேமா தன் கணவனிடம் தொடர்ந்தாள்....


'தினமும் கரண்ட் கட்-ஆகி மறுபடியும் கரண்ட் வந்ததும் எல்லாரும் அவங்கவங்க வீட்டுக்குள்ள போயிடுவாங்க... ஆனா இவங்க ரெண்டு பேரு மட்டும் மாடியிலியே இருந்து ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருப்பாங்க... எங்க வீடுலியே இந்த விஷயம் எனக்கு மட்டும்தான் தெரியும்... வீட்ல சொல்லிடலாம்னு நான் அண்ணாகிட்ட கேட்டப்போ... இன்னும் கொஞ்ச நாளாகட்டும்னு தட்டிக்கழிச்சுக்கிட்டு வந்தான்... ஆனா... ஒருநாள் எங்கப்பாவுக்கு விஷயம் தெரியவந்துடுச்சு... ரெண்டு குடும்பத்துக்கும் பயங்கர சண்டை...'
------------------


அதே நேரம் மாடியில்...


மின்மினி 'ஆஆஆ' என்று அலறினாள்...


கவின் திடுக்கிட்டான்... 'என்ன ஆச்சு மின்மினி..?'


ஒரு கரப்பான்பூச்சி மின்மினியன் உடையில் ஏறிக்கொண்டிருந்தது...


கவின் அந்த கரப்பானை உற்றுப்பார்த்து, அதன் மீசையைப் பிடித்து எடுத்தான்


'எப்படியோ தப்பிச்சிடுச்சு..! ஊரு என்னதான் மாறினாலும், கன்னித்தீவும், கரப்பான்பூச்சியும் அழியவே மாட்டேங்குதுல்ல...' என்று கவின் சிரித்தபடி கூற... வீணாவும் இதை ரசித்தாள்...


--------------------


அறையில் ஹேமா தொடர்ந்தாள்...


'ஒரு நாள் ராத்திரி... எல்லாரும் மாடியில இருக்கும்போது, ஒரு பெரிய வெளிச்சம் மின்னல் மாதிரி ஆனா நீலக்கலர்ல வானத்துல வந்துப்போச்சு... எல்லாரும் ஆச்சரியமா அதையே பாத்துட்டு இருந்தாங்க... அன்னிக்கு மட்டும்... கரண்ட் வழக்கத்தைவிட 3 மணி நேரம் எக்ஸ்ட்ரா கட் ஆச்சு... வழக்கம்போல, கரண்ட் வந்ததும் எல்லோரும் அவங்கவங்க வீட்டுக்குள்ள போயிட்டாங்க... ஆனா, எங்கண்ணாவும்... மின்மினியும் வரவேயில்ல... ரொம்ப லேட்டானதால, அப்பா ரொம்ப சத்தம் போட்டார்... மாடியில போய் கூட்டிட்டு வர்றேன்னு மேல போனார்... கையும் களவுமா மாட்டிக்கப்போறாருன்னு நான் ரொம்ப பயந்தேன்... ஆனா... ஆனா... மேல அண்ணாவைக் காணோம்... மின்மினியையும் காணோம்னு அவங்க மாடியில அவங்கப்பா அம்மாவும் தேடிட்டு இருந்தாங்க... பெரிய பிரச்சினையாச்சு... ரெண்டு பேரும் ஓடிப்போயிட்டாங்கன்னு போலீஸ்கிட்ட கம்ப்ளைண்ட் கொடுத்து, அது இதுன்னு ஏகப்பட்ட கலவரமாச்சு... அவமானம் தாங்க முடியாம மின்மினியோட  ஃபேமிலி காலி பண்ணிக்கிட்டு இந்த ஏரியாவை விட்டே போயிட்டாங்க...' என்று நடந்த விஷயத்தை கூறி முடித்தாள்


ஹேமாவின் கணவன் தொடர்ந்தான், 'ஆனா, அவங்க ரெண்டு பேரும் ஓடிப்போகலையில்லியா... செவ்வாய் கிரகத்துக்காரங்க வந்து கடத்திட்டு போயிருக்காங்கன்னு இவங்க சொல்றாங்க... இந்த விஷயத்தை எப்படி எடுத்துக்கருதுன்னே தெரியல ஹேமா...' என்றான்


'தெரியலீங்க... எப்படியோ... எங்கண்ணா திரும்பி வந்ததே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு... அவன் வயசு அப்படியே இருந்தா என்ன... எனக்கு எங்கண்ணா அண்ணாதான்... அவனுக்கு ரொம்ப பிடிச்ச மாங்காய் சாம்பாரும்... மட்டன் வறுவலும் செஞ்சி வச்சிருக்கேன்... இருங்க கூட்டிட்டு வர்றேன்...' என்றுகூறிவிட்டு எழுந்தாள்... சோலார் பேணலில் இயங்கும் லிஃப்டில் ஏறினாள்... 34ஆவது நம்பர் பட்டனை அழுத்தி லிஃப்டுக்குள் காத்திருந்தாள்... அறை திறந்தது... வெளியேறி மீண்டும் சில படிகளேறி மொட்டை மாடிக்கு வந்தடைந்தாள்...


'அண்ணா..' என்று சத்தம் போட்டுக்கொண்டே வந்தாள்...


மாடி காலியாக இருந்தது...


'வீணா..?' என்று மீண்டும் சத்தம் போட்டாள்... யாரும் இல்லை...


'இங்கேதானே பேசிட்டிருக்கேன்னு சொன்னா..? எங்கே போனாங்க..?' என்று குழம்பியபடியே... திரும்பி பார்த்துக் கொண்டிருக்க... திடீரென்று ஒரு மின்னல் வெளிச்சம் போல நீலக்கலரில் ஊரெங்கும் பரவி அடங்கியது...


ஹேமாவிற்க்கு வயிற்றுக்குள் ஏதோ புளியைக் கரைத்தது போலிருந்தது... அண்ணாந்து வானத்தைப் பார்த்தாள்... தூரத்தில் ஒரு நட்சத்திரம் மட்டும் மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருப்பதுபோல் தெரிந்தது... பயத்தில் மயங்கி விழுந்தாள்...
----------------


வீணா மெல்ல கண் திறந்தாள்... அவள் ஏதோ ஒரு விசேஷ ராட்டினம் போன்ற ஒரு கூண்டில் இருப்பதை உணர்ந்தாள்.... இது என்ன இடம் என்று குழப்பத்துடன் சுற்றிலும் பார்க்க...


அவளுக்கு எதிரே ஒரு விநோத உருவம் நின்றிருந்தது.. அந்த உருவத்துக்கு அருகில் கவினும், மின்மினியும் புன்னகையுடன் நின்றிருந்தனர்... ஒரு சின்ன வித்தியாசம் அவர்களது கண்கள் இப்போது முழுவதுமாய் கருப்பு நிறத்தில் இருந்தது... கண்ணிமை மேலும் கீழும் என்றில்லாமல் இடமும் வலமுமாய் அடித்துக் கொண்டது... அந்த உருவம் இவர்களிடம் ஏதோ ஒரு விநோத குரலில் புரியாத பாஷையில் பேசிக்கொண்டிருந்தது... 


அந்த உரையாடலின் தமிழாக்கம்


'உங்களை பூமிவாசிகள் சந்தேகிக்கவில்லையே..?'


'இல்லை... எங்களை நம்பிவிட்டார்கள்... மேலும், நாங்கள் கடத்தபட்டது செவ்வாய் கிரகத்து மக்களால்தான் என்றும் அவர்களை நம்பவைத்துவிட்டோம்...'


'நல்லது அவர்கள் செவ்வாய் கிரகத்துக்கு சென்று முழுமையாக தேடவே பல வருடங்களாகும்... இதில் சூரியகுடும்பத்தை தாண்டி வசிக்கும் நம்மை அவர்கள் அண்டுவதற்கு நிச்சயம் பல நூற்றாண்டுகளாகும்..' என்ற அந்த விநோத உருவம் வீணாவை உற்றுப் பார்தது... 'இவளைப் கடத்துவதில் சிரமமேதுமில்லையே..?' என்று கேட்டது...


'இவள் தானாகவே எங்களிடம் தனியாக வந்து மாட்டிக் கொண்டாள்... ஆனால், இந்த பூச்சியைப் பிடிக்கத்தான் பெரும்பாடு படவேண்டியிருந்தது...' என்று கவின் வடிவிலிருந்த அ(து)வன்  தனது பாக்கெட்டிலிருந்த கரப்பான் பூச்சியை எடுத்துக் காட்டினான்...


அந்த விநோத உருவம் ஆர்வமாக கரப்பான்பூச்சியை பார்வையிட்டது... 'பல ஆண்டுகளாய் பூமியில் வாழும் உயிரினம்... இதுதான்... ஆஹா.. ஒரு மனிதப்பெண்... ஒரு பூச்சி... நாம் நினைத்தது கிடைத்துவிட்டது... இனி நம் கிரகம் சுபிட்சமடையும்' என்று சிரிக்கத் தெரியாமல் ஒரு விநோத சப்தமிட்டது..!!!


- நிறைவு -


Signature

Popular Posts