Sunday, December 25, 2011

'அம்புலி 3D' : முதல் ட்ரெய்லர்

வணக்கம் நண்பர்களே,
அம்புலி படத்தின் டீசர் ட்ரெய்லரை இப்பதிவுடன் இணைத்துள்ளேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்தை தெரிவிக்கவும்...

AMBULI FIRST TEASER

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Saturday, December 10, 2011

சந்திர கிரகணம் 2011

 இன்று மாலை நிகழ்ந்த சந்திர கிரகணத்தை, 'அம்புலி 3D' குழுவினர்கள் சேர்ந்து எங்கள் அலுவலக மாடியில் கண்டு களித்தோம். கேமிராமேன் சதீஷ், இன்று நிகழ்ந்த கிரகணத்தை 'ஸ்டாக் ஷாட்'டாக வைத்துக் கொள்வதற்காய் ஷூட் செய்து கொண்டிருந்தார். சுற்றிலும் நின்றிருந்த நாங்கள் ஒவ்வொருவரும் கிரகணத்தைப் பற்றிய அவரவர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தோம்

அறிவியல் ரீதியாய் அதற்கு ஆயிரம் அர்த்தம் கூறினாலும், எனக்கு கிரகணத்தை பார்த்து சிலாகிக்கும்போது, சிறுவயதில் என் தாத்தாவிடம் கேட்ட சந்திரமண்டல கதைகள் நினைவுக்கு வந்துக் கொண்டிருந்தன... இது போன்ற ஸ்பேஸ் ஃபேண்டஸி ரசத்துடன் கூடிய நம்மூர் பழங்கதைகளுக்கு(ம்) என்னை ரசிகனாக்கிய என் தாத்தா கண்டிப்பாக மேலிருக்கும் நட்சத்திரங்களின் நடுவே ஜொலித்துக் கொண்டிருப்பார் என்று அறிவியல் அறிவை தோற்கடித்து நம்பத்தூண்டுகிறது என் நெஞ்சம்.

முன்பெல்லாம் நிலாச்சோறுக்கு அடிக்கடி கூடும் குடும்பக் கூட்டம்...
அரிதாய் தோன்றும் கிரகணத்தை காண அவரவர்வீட்டு மாடியில் கூடியிருந்தது...

தூரத்து மாடியில் எஃகோ எஃபெக்டில் கேட்கும் முகம்தெரியா குழந்தைகளின் குதூகலக்குரல் கிரகணத்துக்கு மேலும் கிராக்கி கூட்டிக்கொண்டிருந்தது...

தியேட்டரில், படத்தின் நடுவே கரண்ட் கட் ஆவதுபோல்...
கிரகணத்தை ஆழ்ந்து ரசிக்கும்போது குறுக்கே வந்து தொலைத்த மேகத்திரளை திட்ட மனம் வரவில்லை...

தோன்றி... மறைந்து... பின்தோன்றும் இந்த மாயை...
இயற்கை, சிலமணித்துளிகளே வானில் நிகழ்த்தும் கிராஃபிக்ஸ் காட்சி...
கிரகணம்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Sunday, November 20, 2011

'அம்புலி 3D' : அமுதனின் டைரி... (பக்கம் 3)







அமுதன் வாசித்த புல்லாங்குழல் மெட்டு இதுதான்...

CLICK HERE FOR AMUDHAN'S LOVE FLUTE



Signature

Tuesday, November 15, 2011

'அம்புலி 3D' : அமுதனின் டைரி... (பக்கம் 2)

அமுதனின் டைரியில் பக்கம் 2ல் எழுதியிருந்தது...




Signature

Monday, November 14, 2011

'அம்புலி 3D' : அமுதனின் டைரி...

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்...
இந்த வாரத்திலிருந்து அம்புலி படத்தில் வரும் ஹீரோ கதாபாத்திரமான அமுதன் எழுதிய டைரியை இன்று முதல் ரிலீஸ் வரை தினமும்...அனைத்து சமுதாய வலைத்தளங்களிலும்  பகிரலாம் என்று முடிவு செய்தோம்... இதோ உங்களுக்காக...


உங்கள் மேலான கருத்துக்களை பகிரவும்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Saturday, November 05, 2011

"அம்புலி 3D" ஷூட்டிங் ஆல்பம் - பகுதி 2

புகைப்படம் #008
எடுத்த நாள் : February 12, 2011
இந்த புகைப்படம் KTVR கல்லூரியில் நள்ளிரவு படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டது... ரேடியோவில் கேட்கும் எம்.ஜி.ஆர். பாடலை ('ஒரு பெண்ணை பார்த்து நிலவைப் பார்த்தேன்...') நாயகன் அஜய் கேட்டு நடனமாடுவது போன்ற காட்சியமைப்பு...  உற்சாகமான பாடலென்பதால் அனைவரும் தூக்கத்தையும் களைப்பையும் மறந்து செயலாற்ற அப்பாடல் உதவியாக இருந்தது...
------------------------------


புகைப்படம் #009
எடுத்த நாள் : March 09, 2011
நாயகன் அஜய் சைக்கிளில் 3D ரிக் சங்கதிகளை மாட்டிக்கொண்டு வண்டி ஓட்ட ஆயத்தமானபோது எடுக்கப்பட்ட புகைப்படம்...
------------------------------


புகைப்படம் #010
எடுத்த நாள் : April 14,, 2011
'குட்டுப்பட்டாலும் மோதிர கையால் குட்டுப்பட வேண்டும்' என்று சொல்வார்கள்... இந்த காட்சியில் நாயகன் ஸ்ரீஜித். நடிகர் திரு.தம்பி ராமையா அவர்களிடம் அறை வாங்குவது பல ரீடேக் எடுக்கபட்டபோது எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு...
------------------------------

புகைப்படம் #011

 எடுத்த நாள் : March 04, 2011
நடிகை உமா ரியாஸ் மேடம் , 40 அடி க்ரேனில் மேலே ஏற வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை கேமிராமேனிடம் தெரிவிக்க... படப்பிடிப்பின் ஓய்வுநேரத்தில் நிறைவேற்றப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.

 ------------------------------

 புகைப்படம் #012
எடுத்த நாள் : February 16, 2011
நடிகை கலைராணி மேடம், இரகசியங்களை காலம்காலமாக சுமக்கும் ஒரு சீமாட்டி என்ற மூதாட்டியின் கதாபாத்திரத்தில் நடித்தப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்... க்ளாப் அடிப்பவர் உதவி இயக்குநர் உசேன்... பின்னால் கருப்பு சட்டையில் நடிகர் ஜெகன்... மற்றும் ஸ்ரீஜித் அஜய் (மறைவாய்)
 ------------------------------

புகைப்படம் #013 
எடுத்த நாள் : March 17, 2011
கலை இயக்குநர் ரெமியன் அவர்கள், ஒரு ஊதுபத்தி தொழிற்சாலை செட் போட்டு முடித்த சந்தோஷத்தில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு... அருகில் தொப்பி போட்டு நடப்பவர் துணை கலை இயக்குநர் அஷோக் அவர்கள்.... 
 ------------------------------


புகைப்படம் #014

எடுத்த நாள் : February 02, 2011
கலை இயக்குநரின் மற்றுமொரு கலைவெளிப்பாடாய் இந்த மரவீடு செட்... இத்தனை பேரின் பாரத்தை தாங்கியபடி சற்றே உயரத்தில் கட்டப்பட்ட செட்... நானும் (ஹரீஷ் நாராயண்) நண்பர் ஹரியும் மாணிட்டரை பார்த்தபடியிருக்க, பின்னனியில் படக்குழுவினர் அடுத்த காட்சிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்...

(தொடரும்)


Signature

Monday, October 17, 2011

"அம்புலி 3D" ஷூட்டிங் ஆல்பம் - பகுதி 1

அம்புலி 3D திரைப்படத்தளத்தில் எடுத்த சில புகைபடங்களை, அவற்றை எடுக்கும்போது நடந்த சுவாரஸ்ய தகவல்களை எழுதி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..!

புகைப்படம் #001

எடுத்த நாள் : February 08, 2011

ஒரு பாடல் காட்சியின்  படப்பிடிப்பில் இடைவேளையின்போது எடுத்த புகைப்படம்... நடனக்கலைஞர் சந்தியா அபிநயம் பிடிக்கும் முறையை நடிகை சனம் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறார்...
------------------------------------------------------------------------


 புகைப்படம் #002
 எடுத்த நாள் : February 11, 2011

(இடம்) : துணை இயக்குநர் தினேஷா நடித்துக்காட்டுகிறார்

(வலம்) : நடிகை உமா ரியாஸ் அவர்கள்... குழந்தை நட்சத்திரம் ஃபாஸில்-உடன் சேர்ந்து நடிக்கும்போது எடுத்த புகைப்படம்
------------------------------------------------------------------------

புகைப்படம் #003
 எடுத்த நாள் : February 10, 2011


ஒளிப்பதிவாளர் சதீஷ். ஜி சுமார் 100 அடி  உயரத்திலிருந்து ஒரு அபாயகரமான காட்சி ஒன்றை படம்பிடிக்கும்போது எடுத்த புகைப்படம்
------------------------------------------------------------------------


புகைப்படம் #004
 எடுத்த நாள் : February 11, 2011


இடைவேளையில்... உதவி இயக்குநர்கள் குழு ஒன்றுகூடி எடுத்துக்கொண்ட புகைப்படம்...

பின்னனி குரல் : 'ஷாட் ரெடி... அஸிஸ்டெண்ட்ஸ்லாம் எங்கப்பா போய் தொலஞ்சீங்க...? ஒருத்தரையும் காணோம்...!'
------------------------------------------------------------------------


புகைப்படம் #005
 எடுத்த நாள் : April 15, 2011


'ராக் & ரோல்' பாடல் படப்பிடிப்பின்போது டான்ஸ் மாஸ்டர் தினாவும் அவரது உதவியாளர்களும் நடிகர்களுக்கு நடனப்பயிற்சியளித்த போது எடுத்த புகைப்படம்
------------------------------------------------------------------------


புகைப்படம் #006
எடுத்த நாள் : February 11, 2011 


(இடது) படத்தின் 2 இயக்குநர்களில் ஒருவரான ஹரிஷங்கர், நடிகர் அஜய்-க்கு சைக்கிளை ஃப்ரேமில் எங்கு தொடங்கி எங்கு முடிக்க வேண்டும் என்று தடம் குறித்து காட்டியபோது எடுத்தது...

(வலது) பயிற்சிக்கு பிறகு நடிகர் அஜய், ஸ்ரீஜித்துடன் சைக்கிளில் தடம் மாறி சுவற்றில் முட்டிக்கொண்டபோது எடுத்த புகைப்படம்...
------------------------------------------------------------------------


புகைப்படம் #007
எடுத்த நாள் : April 25, 2011


இந்த காட்சி பாடலுக்கு இடையில் வரும் ஒரு இன்ஸர்ட்... காட்சிப்படி நடிகர் தம்பி ராமையா அவர்களுக்கு மாணவர்கள் தயிர் சாதம் ஊட்டிவிடுவது போல் எடுக்கவேண்டியது... சில எக்ஸ்ட்ரா டேக் வாங்கியபின் காட்சிமுடிந்து  டின்னர் ப்ரேக் விடப்பட்டது.. 'தம்பியண்ணன்' (இப்படி நான் அவரை அழைப்பது வழக்கம்) அவர்களை சாப்பிட அழைத்தபோது 'அடப்போ தம்பி... அதான் பசங்க எல்லாம் போதுமானளவுக்கு ஊட்டிவிட்டுட்டாங்களே... எனக்கு டின்னரே வேண்டாம்...' என்று கூறிவிட்டார்...


மீண்டும் அடுத்த பகுதியில் சந்திக்கிறேன்.

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Thursday, October 13, 2011

ரயில் சிநேகம்...


     (Photo Courtesy : http://guide2chennai.blogspot.com)

நீண்ட நாட்களுக்குப் பிறகு கிட்டிய ரயில் பயணம்
ஜன்னலுக்கு வெளியே, நினைவுகளையும் பின்னுக்கு தள்ள
முப்பது நிமிட முத்துக்குளியலில்... முத்தாய் கிடைத்தன
சில ஞாபகங்கள்...

கல்லூரிக் கால பருவ மழையில் நண்பர்களுடன் செலவு செய்த
நட்பெனும் சில வருடங்களின் சில்லிடும் சாரல்கள்...

உண்டோம்...
உறங்கினோம்...
உறக்க கத்தினோம்...
காதலித்தோம்...
கானம் பாடினோம்...
காற்று வாங்கினோம்...
எப்போதாவது படித்தோம்...
முப்போதும் பழகினோம்...
வேற்றாரரையும் உற்றாராய் அணுகினோம்...
இப்படி நாங்கள் சில நிமிடங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த
வாடகை வீடு
ரயில்..!

இரண்டு கால்களும் தண்டவாளங்களாக
தலைக்குமேலே 'மாணவன்' என்ற மின்சாரக் கம்பி பாய்ச்சிய சக்தியில்
கைகள் கோர்த்து கொண்ட சந்திப்புகளாய் (ஜங்ஷன்)
நட்பெனும் பயணம் மேற்கொண்டோம்...

அவ்வப்போது கல்லூரி எனும் பணிமனையில் ஓய்வெடுத்திருந்தபோதிலும்
தொடர்வண்டியாய் தொடர்ந்தது எங்கள் பயணம்...
ஒரு சமயம் ரயிலிறங்கினோம்...
எதற்கு..?

ரயில் சுவற்றில் மட்டும் கிறுக்கிய எங்கள் பெயர்களை
வாழ்க்கை சுவடுகளும் சுவைக்கட்டும் என்று...

இப்படி அன்று வாழ்க்கையை சுவைக்க கற்றுத்தந்த ரயில்
இன்று எங்கள் நினைவுகளை சுமந்து எங்கள் நெஞ்சில் கனக்கிறது...

தடம்புரளா எங்கள் நட்பெனும் காதலின் நினைவுச் சின்னம்
ரயில்..!

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Sunday, August 21, 2011

அம்புலி 3D பாடல்கள்...




அம்புலி 3D திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடந்தேறியது. என்னுடன் படித்த பள்ளி நண்பர்களும், கல்லூரி நண்பர்களும், உடன் வேலைசெய்த நண்பர்களும் வந்திருந்தனர். வலையுலக நண்பர்களில் 'கேபிள் சங்கர்' சில பதிவர்களுடன் வந்திருப்பதாக தெரிவித்தார். வந்திருந்து வாழ்த்திய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி..!


விழா நடந்தேறிய விதத்தையும் புகைப்படத்தையும் பிறகு பதிகிறேன்..! முதலில் செவிக்கு உணவு...

அம்புலி திரையிசை பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். கேட்டுவிட்டு உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.


01. HAPPY FAREWELL DAY
பாடகர்கள் : பென்னி தயாள், பாப் ஷாலினி, S ரஷ்மிதா, ப்ரியங்கா
பாடல் : நா. முத்துக்குமார்
இசை : மெர்வின் சாலமன்



அம்புலி படத்தின் 4 இசையமைப்பாளர்களில் இந்த பாடலுக்கு இசையமைத்த மெர்வின் சாலமன் எங்கள் குழுவுக்கு புதியவர், நால்வரில் இளையவர்.  'பொறியல்' என்ற RockBand நடத்தி வரும் இளைஞர்.கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த மெர்வினை ஒரு RockBand நிகழ்ச்சியில் சந்தித்து தேர்வு செய்தோம்.இந்த பாடலை அவர் கம்போஸ் செய்யும்போது, கல்லூரியில் அவருக்கு இறுதியாண்டு தேர்வு நடைபெற்று கொண்டிருந்தது. பாவம்... புத்தகத்தையும், கீ-போர்டையும் ஒன்றாக வாசிக்க வேண்டிய கட்டாயம்... ஆனால் பாடப்பரீட்சையில் வெற்றி பெற்றுவிட்டார், பாடல் பரீட்சையில் வெற்றி பெற்றிருக்கிறாரா என்று நீங்கள் கேட்டுப் பார்த்து சொல்லுங்கள்...

---------------------------------------------------------

02. நெஞ்சுக்குள்ள யாரு....
பாடகர்கள் : கார்த்திக், சின்மயி
பாடல் : கவிஞர் தாமரை
இசை : சாம் C.S.



இந்த பாடலின் இசையமைப்பாளர் சாம் C.S. எங்கள் நீண்ட நாளைய நண்பர், கலையம்சத்தில் பன்முகம் கொண்டவர். எனக்கு முதலில் பாடலாசிரியரென அறிமுகமானாலும் அவர் இசையில் வல்லவர் என்பது அவர் இசையமைத்த "14 For Teen" என்ற ஆல்பம் மூலமாக உணர்ந்தேன். மெலோடி பாடல்கள் இவரது ஸ்பெஷாலிட்டி. அம்புலியில் இனிமையான ஒரு செமி ஃபேன்டஸி மெலோடியை அவரிடம் கேட்டபோது அவர் இசைத்து கொடுத்த பாடல்தான் இந்த 'நெஞ்சுக்குள்ள யாரு...'

---------------------------------------------------------


03. மழைக்காடே... மணல்மேடே....
பாடகர்கள் : மதுபாலகிருஷ்ணன்
பாடல் : நெல்லை ஜெயந்தா
இசை : K. வெங்கட் பிரபு ஷங்கர்




இந்த பாடலுக்கு இசை வெங்கட் பிரபு ஷங்கர் (நண்பர் ஹரியின் தம்பி)... இவர் இளையராஜா சாரின் தீவிர ரசிகர். அம்புலி படத்தின் பின்னனி இசையில் ஒரிஜினல் ஸ்கோர் இவர்தான். எனவே, கதையினூடே வரும் ஒரு சந்தர்ப்பத்தில் கிராமத்து மக்களின் ஒட்டுமொத்த வலியை பிரதிபலிக்கும் பாடலான இந்த 'மழைக்காடே மணல்மேடே' பாடலை இவரே இசையமைத்து பாடல் வடிவம் கொடுத்தார்... கேட்டுப்பாருங்கள்.. எப்படியாவது இவரது பாடலை இளையராஜா சாரிடம் போட்டு காட்டி கருத்து கேட்க வேண்டும் என்பது எங்கள் குழுவினரின் உள்ளாசை... அவரிடம் கேட்கும்போது கேட்டுக் கொள்ளலாம். இப்போது நீங்கள் கேட்டுவிட்டு கருத்து சொல்லுங்கள்


---------------------------------------------------------


04. சந்திரன சூரியன....
பாடகர்கள் : விஜய்பிரகாஷ்
பாடல் : நா. முத்துக்குமார்
இசை : சதீஷ்




சதீஷ்... இவரை சில வருடங்களுக்கு முன்பு சந்திக்கும்போது 'ஐயப்பன் பக்தி பாடல்களை வெளியிட முயன்று கொண்டிருந்தார். அவர் வைத்திருந்த ட்யூன்கள் மிக அருமையாக இருந்து. எனது முதல் குறும்படமான 'இராமன் எஃபெக்ட்'-ற்கு இவர்தான் சிறப்பாக இசையமைத்து கொடுத்தார். அதன்பிறகு 'ஓர் இரவு', இப்போது 'அம்புலி'யில் முக்கியமான ஒரு கூட்டுப்பிரார்த்தனை பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். எந்த ஒரு கடவுளையும் குறிப்பாக சொல்லாமல் பொதுவாக ஆதிசக்தியை வணங்குவது போன்ற ஒரு பாடல் இது. இந்த பாடல் படப்பிடிப்பின் போதுதான் கிலியான சில அனுபவங்கள் ஏற்ப்பட்டது என்று எனது படப்பிடிப்பு அனபவத்தில் எழுதியிருக்கிறேன்.




---------------------------------------------------------


05. Rock'N Roll
பாடகர்கள் : ரஞ்சித், பாப் ஷாலினி
பாடல் : நா. முத்துக்குமார்
இசை : சாம் C.S.




70-களில் ஈஸ்ட்மென் கலரில் பார்க்கும் சில பாடலை போன்ற ஜாலியான பாடலிது. கவிஞர் நா.முத்துக்குமார் அவர்கள் மிகவும் ரசித்தபடி எழுதி கொடுத்தார். இசையமைப்பாளர் சாம், இந்த பாடலில் 70களில் ஸ்டைலில் விசில், பியானோ, ட்ரம்ஸ் என்று உபயோகித்து வாசித்து கொடுத்தார். குறிப்பாக பாடலுக்கு நடுவில் வரும் ஒரு பியானோ ரன்னிங்-ஐ பலமுறை ப்ராக்டீஸ் செய்து, ஒரு நள்ளிரவில் வாசித்து காட்டினார். அதை அவர் வாசிப்பதை பார்த்தாலே டான்ஸ் ஆடுவது போலிருக்கும்... எனவே, இது நிச்சயமாக கேட்பவர்களை ஆடத்தூண்டும் என்ற நம்பிக்கையில்.... இதோ...





---------------------------------------------------------


06. ஆத்தா நீ பெத்தாயே....
பாடகர்கள் : தஞ்சை செல்வி
பாடல் : நெல்லை ஜெயந்தா
இசை : K. வெங்கட் பிரபு ஷங்கர்




தூங்க வைப்பதற்கு பாடப்படும் தாலாட்டு பாடலை சற்றே மாற்றி 'தூக்கம் தொலைத்து மிரட்சியில் படுத்திருக்கும்' ஒரு கிராமத்து மக்களுக்காக, ஒரு வயதான மூதாட்டி பாடுவதை போன்ற பாடல் இது. இதை 'பாட்டியின் புலம்பல்' என்றும் கூறலாம். இப்பாடலுக்கு இசை K. வெங்கட் பிரபு ஷங்கர், இந்த பாடலுக்காக இவர் ஏற்கனவே 2 ட்யூன்களை இசைத்து வைத்திருந்தார். ஆனால், அவை போதாமல் இன்னும் தேவை தேவை என்று நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கவே, ஒரு நாள் (சற்றே) கோபமாக, இரவு வேளையில் சுமார் 2 மணி நேரத்திற்குள் இந்த பாடலுக்கான ட்யூனையும் முடித்து, அதற்குமேல் சிறப்பு சப்தங்களை சேர்த்து அலங்கரித்து காட்டினார். அது மிகவும் திருப்திகரமாக அமைந்தது. பாடலை 'ஈசன்' புகழ் 'தஞ்சை செல்வி' அவர்கள் உணர்ந்து பாடிக் கொடுத்தார். பாடலுக்கேற்ற முகபாவங்களுடன் மிகவும் சிறப்பாக கலைராணி மேடம் நடித்து கொடுத்தார்.


---------------------------------------------------------


07. Theme of AMBULI
இசை : K. வெங்கட் பிரபு ஷங்கர்



படம் வெளியாவதற்கு முன் ஒரு படத்தின் கதையை பொதுவாக வெளியில் சொல்லமாட்டார்கள். ஆனால், இசையமைப்பாளர் பிரபு தைரியமாக இந்த அம்புலியின் கதையை இசைவடிவில் தீம் மியூஸிக்காக சொல்லியிருக்கிறார். நல்லவேளை வார்த்தையாக விளங்கி கொள்ள முடியாது என்றாலும் இசை மொழியில் சொல்லப்பட்டதால் உணர்வாய் உணர்ந்து கொள்ளுங்கள்...


---------------------------------------------------------


08. 3D ERA
பாடகர்கள் : நரேஷ் ஐயர், ப்ளாஸி
பாடல் : ப்ளாஸி & அம்புலி டீம்
இசை : சதீஷ்



அம்புலி, தமிழ் சினிமாவில் முதல் முழுநீள 3D டிஜிட்டல் திரைப்படம் என்பதை பிரகடனப்படுத்தும் வகையில் அமைந்த கொண்டாட்டமான இந்த பாடல் கடைசி நிமிடத்தில் முடிவாகி ஆடியோ வரிசையில் சேர்க்கப்பட்டது. ஆனால், பாடலில் அந்த கடைசி நேர அவசரம் தெரியாதபடி மேன்மை தீட்டியவர் இசையமைப்பாளர் சதீஷ். இந்த பாடலை எங்களால் மறக்கவே முடியாது. காரணம், ஒரு நாள் டின்னர் முடித்துவிட்டு இரவு வேளையில் அலுவலகத்தில் அம்புலி குழுவினர்கள் அனைவரும் கும்பலாக அமர்ந்து இந்த பாடலுக்கான தமிழ் வரிகளை கூவி கூவி பாடிப்பார்த்து எழுதினோம் (பாவம் அபார்ட்மெண்ட்-ல் தூங்கிக் கொண்டிருந்தவர்கள்). 'நன்றாக வந்துள்ளதோ..?' என்ற சின்ன நம்பிக்கை பிறந்ததுமே சேவல் கூவியது. பேனா மூடி மூடப்பட்டது. 'நரேஷ் ஐயர்' குரலில் குதூகலம் கொஞ்ச,. ஆங்கில வரிகளை 'ப்ளாஸி' எழுதியும் பாடியும் பாடலை பிரமாதப்படுத்திவிட்டார்கள்.


---------------------------------------------------------

எட்டு பாடல்களும் கேட்டுவிட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த பாடலை உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்...

அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

நட்புடன் இணைந்திருப்போம்..! நன்றி வணக்கம்..!


அன்புடன்
ஹரீஷ் நாராயண்

Songs Courtesy : www.raaga.com
Source : http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0003125


Signature

Friday, August 19, 2011

இன்று "அம்புலி 3D" இசை வெளியீடு LIVE ON WEB...







நண்பர்களுக்கு வணக்கம்,


போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருவதாலும், ஆடியோ வெளியீடு குறித்த வேலைகள் அதிகமாக இருப்பதாலும், தொடர்ந்து பதிவு எழுத முடியவில்லை..! இன்று 'அம்புலி 3D' இசை வெளியீடு... சென்னை காமராஜர் அரங்கத்தில் மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது...


நேரில் கலந்து கொள்ள முடியாத வெளிநாட்டு நண்பர்களும் மற்றும் உள்நாட்டு நண்பர்களும் இசை வெளியீட்டு விழாவை கண்டு களிப்பதற்காக இணையதளத்தில் நேரலை ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்துள்ளோம். கண்டிப்பாக பார்த்து உங்கள் கருத்துக்களை பகிரவும்.


AMBUILI 3D LIVE AUDIO LAUNCH LINKS


WWW.AMBULI3D.COM
WWW.FACEBOOK.COM/AMBULI3D
WWW.CHENNAIONLINE.COM


அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Saturday, July 23, 2011

நடிகர் ஆர்யா அம்புலி 3D வெப்ஸைட் துவக்கி வைத்தார்..!


PLEASE VISIT WWW.AMBULI3D.COM FOR "AMBULI 3D"s OFFICIAL WEBSITE

கடந்த வெள்ளிக்கிழமையன்று நடிகர் ஆர்யா அவர்கள் "அம்புலி 3D" திரைப்படத்தின் இணையதளத்தை துவக்கி வைத்தார். இணையதளத்தை முழுவதுமாக பார்த்துவிட்டு கருத்து தெரிவித்தார்.

நெற்றியில் ஒரு சின்ன வெட்டுக்காயம் என்றாலும், பார்க்க அழகான ஹாரிபாட்டர் போலவே தெரிந்தார்.

படத்தின் சில காட்சிகளையும், ட்ரெய்லரையும் பார்த்துவிட்டு "நல்ல முயற்சி நன்றாக உள்ளது" என்று பாராட்டினார்.

அவர் அம்புலி திரைத்தளத்தை துவக்கி வைத்த காணொளி இதோ...









இணையதளத்தை பார்த்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.

அன்புடன்
ஹரீஷ் நாராயண் (DREAMER)


Signature

Tuesday, July 19, 2011

'அம்புலி 3D' படக்குழுவினர்களுக்காக 'ஓர் இரவு' சிறப்புக் காட்சி

எங்கள் குழுவின் முதல் படமான 'ஓர் இரவு' திரைப்படத்தை 'அம்புலி 3D' டீம் பார்ப்பதற்காக பிரத்யேக காட்சி ஒன்றை சென்ற வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு, தேவி ஸ்ரீ தேவி ப்ரிவியூ தியேட்டரில் ஏற்பாடு செய்திருந்தோம்.



↑ 'ஓர் இரவு' இயக்குனர்கள்
ஹரி ஷங்கர், ஹரீஷ் நாராயண், கிருஷ்ண சேகர்


'அம்புலி 3D' குழுவினரில் சுமார் 60% ஆட்கள் வந்திருந்து சிறப்பித்தனர். மீதமிருந்த நண்பர்கள் தத்தம் பணியில் வெளியூர்களில் சிக்கிக்கொண்டதாக தெரிவித்தனர்.

படத்தை பார்த்து பாராட்டியதோடு பலரும் 'ஏன் இந்த படத்துக்கு நீங்கள் சரியாக பப்ளிசிட்டி செய்யவில்லை..! ஏன் A சென்டர் தியேட்டர்களில் திரையிடவில்லை' என்று ஏகத்துக்கும் திட்டி தீர்த்தனர். கண்டிப்பாக 'ஓர் இரவு' படத்தை ரீ-ரிலீஸ் செய்யும்படி அறிவுறுத்தி சென்றனர்.




↑  டான்ஸ் மாஸ்டர் தினா அவர்களுடன்


↑  ஸ்டண்ட் மாஸ்டர் T.ரமேஷ் அவர்களுடன்


↑  திரு. டேனியல் ப்ரொடக்ஷன் மேனேஜர் சக்தி அவர்களுடன்


↑  அண்ணன் தேனி முருகன் & ப்ரொடக்ஷன் எக்ஸிக்யூடிவ் சந்தனபாண்டியன் அவர்களுடன்


↑  கோகுல் மற்றும் நண்பர்கள்


↑  உமா ரியாஸ்



↑  மேக்கப் சசி (நடுவில் இருப்பவர்) அவர்களுடன்



↑  காஸ்ட்யூமர் பாபு (குழந்தையுடன்)


↑  லைட் டிபார்ட்மெண்ட் ஷக்தி (ப்ரௌன் ஷர்ட்)


குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், சிறப்பு காட்சியில் கலந்து கொண்ட IOB-ல் பணிபுரியும் திரு. ஜெயப்பிரகாஷ் அவர்கள், படத்தை பார்த்த அடுத்த நாள் எனக்கும் ஹரிக்கும் கான்ஃபரன்ஸ் கால் போட்டு நீண்ட நேரம் பேசி பாராட்டி கொண்டிருந்தார். படத்தை பார்த்து பயந்த அவரது இன்ஜினியரிங் படிக்கும் மகன், இரவு 1.30 மணியளவில் கதவு தட்டி அப்பா அம்மாவுக்கு நடுவில் படுத்து கொண்டதாக கூறினார். இப்படம் சரியான ஆடியன்சுக்கு போய் சேர்ந்திருந்தால் இது கண்டிப்பாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும், எப்படியாவது ரீரிலீசுக்கு முயலுங்கள் என்று வற்புறுத்தினார். 70களில் அன்னக்கிளி படத்தை முதலில் ஏற்றுக்கொள்ளாத மக்கள் பிறகு அந்த படத்தையும் இசையையும் கொண்டாடியதை உதாரணம் கூறினார். அவருக்கு இப்பதிவின் மூலம் எனது குழுவினர் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

நாங்களும் அந்த எண்ணத்தில் (ரீ-ரிலீஸ்) இருப்பதால்தான் இப்படம் குறித்த எந்த உரிமையையும் இன்னும் எவ்விடத்திலும் வியாபாரப்படுத்தாமல் வைத்திருக்கிறோம்.

↑  IOB ஸ்டாஃப் நண்பர்கள்


↑ மற்றும் நண்பர்களின் குடும்ப நபர்கள்


இந்த பிரத்யேக காட்சி, 'அம்புலி 3D'படப்பிடிப்பில் உடன் பணியாற்றிய அத்தனை நண்பர்களையும் மீண்டும் சந்திக்கும் ஒரு get togetherஆக அமைந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி..!


Signature

Thursday, July 14, 2011

"தமிழ் டைஜஸ்ட்" வழங்கும் கவிதைப் போட்டி


வணக்கம் நண்பர்களே..!

சமீபத்தில் எனது நண்பர்கள் ஆக்கத்தில் உருவான  'தமிழ் டைஜஸ்ட்' என்ற ஆங்கிலம் வழி தமிழ் பயிற்சி-யைப் பற்றி தெரியவந்தது. இந்த பயிற்சி முறையில், ஆங்கிலம் தெரிந்த யாரும் தமிழை எளிதில் படித்து தெரிந்து கொள்ளும் வண்ணம் பாடதிட்டங்கள் வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு.

இந்த தரமான பயிற்சி முறையை விளம்பரப்படுத்தும் வகையில் இவர்களது இணையதளமான http://www.tamildigest.com/ -ல் ஒரு கவிதை போட்டி நடத்துகிறார்கள். இந்த போட்டியில் தமிழ் ஆர்வலர்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

போட்டியை பற்றி மேலும் விவரங்களுக்கு இங்கே க்ளிக்கவும் http://tinyurl.com/5uzmffx

http://www.tamildigest.com/ இணையதள வெளியீட்டின்போது...
(Photo Courtesy : http://www.behindwoods.com/)

நேர்மையான முறையில் நடத்தப்படும் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஊக்கப்பரிசுகள் உண்டு.

வலைப்பதிவுலகில் தமிழ் கவிதைகள் எழுதும் புதுக்கவிகள் ஏராளம் என்று என் தரப்பில் என் நண்பர்களிடம் வாதாடிக் கொண்டிருந்தேன். எனவே இந்த கவிதை போட்டியை பற்றி இதோ இங்கே பகிர்ந்துள்ளேன்.

நம் வலையுலக நண்பர்கள்(ளும்) போட்டியில் கலந்து கொண்டு  வெற்றி பெற வாழ்த்துக்கள். போட்டியை பற்றி முடிந்தால் நீங்களும் உங்கள் நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

Signature

First News about "AMBULI 3D" on Net..!

INDIAGLITZ : 'Ambuli 3D' - With a difference

For all those of you who sulk at this, the makers of 'Ambuli 3D' vouch that you will be awed and proud of this 3D film that's take you onto a rural journey into Indian villages, in 3D!

Sounds interesting right?

'Ambuli 3D' is the brainchild of the makers who had come out with 'Orr Eravuu' last year, the latter was a horror thriller with a scientific approach to supernatural beings. The film also won the 'Best Independent Film' at the Chennai International Film Festival.

'Ambuli 3D' is inspired from a folklore tale which is being told in various parts of village in south India. The film is canned in various parts of villages in Tamil Nadu.

The USP of the film is that it is shot using a state of the art 'Panasonic 3D camera' claim the makers. Normally, a 3D film is shot with two cameras fit in a single huge rig  and have lot of constrain in using the rig because of its huge, heavy and consumes a lot of time for setting it up.

With this, constrains have been overcome. It�s digital, compact and has two lenses fixed in a single body which acts like a human eye (just like the camera used in Avatar) which gives a brilliant 3D effect and setting the convergence is also made simple. At the same time while shooting itself you will be able to see the output live in 3D.

This feature film that is coming up in 3D will see a website launch on July 15.



Signature

Monday, July 11, 2011

"அம்புலி 3D" படப்பிடிப்பு அனுபவங்கள் - 8

மூணாறில் "அம்புலி 3D"


யாரோ சென்ற வருடம் (2010) எனது பிறந்தநாளுக்கு வாழ்த்தும்போது, 'அடுத்த பிறந்த நாளுக்கு நீ நல்ல உயரமான இடத்தில் இருக்க வேண்டும்' என்று வாழ்த்தியிருப்பார்கள் போல... அதனாலோ என்னவோ, இந்த முறை எனது பிறந்த நாள் 6600 அடி உயர மலைப்பிரதேசமான 'மூணாறில்' கொண்டாடப்பட்டது. அதுவும், எனது "அம்புலி 3D" படப்பிடிப்பு குழுவினருடன் சேர்ந்து பிறந்த நாள் கொண்டாடிய அனுபவம் என்றென்றும் மறக்கமுடியாது. என்ன ஒரே வித்தியாசம் 'ஹேப்பி பர்த்டே டு யூ' பாடலுக்கு பதிலாக, நாங்கள் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்த டூயட் பாடல்தான் பின்னனியில் ஒலித்து கொண்டிருந்தது.



↑ தயாரிப்பு நிர்வாகி திரு. சக்திவேல் கத்தியை கொடுக்க...


↑  ஹரியுடன்...

↑  கேமிராமேன் சதீஷூடன்...

↑  டான்ஸ் மாஸ்டர் தினாவுடன்...


கேக் வெட்டும்போது முகத்தில் கரி பூசுவது போல் கேக்-ஐ பூசும் பழக்கத்தை யார் கண்டுபிடித்தது என்று தெரியவில்லை... கேக் வெட்டி, கொண்டாடி முடித்து பார்க்கும்போது, எல்லோர் முகத்திலும் ஹுரோயின் முகத்தில் போடும் மேக்கப்-ஐ காட்டிலும் அதிகமான க்ரீம் பூசப்பட்டிருந்தது.


சாமிக்கு வெண்ணை சாற்றியது போல் தெரிபவர்
துணை இயக்குனர் தினேஷா


வெட்கத்துடன் கேக்-ஐ பெற்று கொள்பவர் சாம் (இசையமைப்பாளர்)


கேக்கினால் நலுங்கு வைத்து கொள்பவர்
துணை இயக்குனர்


அன்புத்தொல்லையால் அவதிப்படுபவர்
உதவி இயக்குனர் தளபதி (பெயரே தளபதிதான்)


லைட்மேன் சீஃப் மோகன் அவர்களுடன்...


கொண்டாட்டத்திற்கு பிறகு
எங்கள் திறந்தவெளி டெம்பரவரி ரெஸ்டாரண்ட்-ல்

மூணாறு... கடல்மட்டத்திலிருந்து 2000 மீட்டர் கடவுளுக்கு அருகில் நம்மை கொண்டு செல்லும் பூலோக சுவர்க்கம். மலைப்பாதையில் பயணம் செய்யும் போது 'செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்...' பாடல் ஞாபகம் வரும், சில சிகரங்களைப் பார்க்கும்போது இயற்கையை பற்றி க(வி)தை எழுத தோணும். இங்கு வாழும் மலைவாழ் மக்களை பார்க்கும்போது 'கொடுத்து வைத்தவர்கள் ' என்று போற்ற தோன்றும். 'வருடத்தில் ஒரு மாதமாவது வந்து தங்கிவிட்டு போக வேண்டும்' என்று உறுதிமொழி எடுக்க தோன்றும். கடமைக்கென்றில்லாமல், கண்ட நேரத்தில் பெய்யும் மழையின் சாரல்கள் நம்மை அடிக்கடி மயிர்கூச்செரிய செய்யும்.

"அம்புலி 3D"-ன் நான்கு இசையமைப்பாளர்களில் ஒருவரான 'சாம்' அவர்களின் பிறந்த  ஊர் மூணாறுதான் என்பதால், அவர்மூலமாக நல்ல லொகேஷன்களை கேட்டு தெரிந்து கொண்டோம். 'மைனா' புகழ் திரு. மூணாறு சுப்பிரமணி அவர்கள்தான் லொகேஷன் மேனேஜர்... அவரிடம் இடங்களை கூறி லொகேஷன்களை தேடிப்பிடிப்பதில் சிரமம் எதுவும் இருக்கவில்லை...

மூணாறில் இன்னொரு விஷயம் மிகவும் பிரசித்தம். அது இங்கிருக்கும் 'அட்டை பூச்சிகள்'... காட்டுமிருகங்களான புலி, சிங்கம்,கரடி போன்றவைகள் நம்மை மிரட்டாத அளவுக்கு ஒரு மிரட்டலை இங்கிருக்கும் அட்டை பூச்சிகள் நமக்கு கொடுக்கின்றன. எங்கள் படப்பிடிப்பு குழுவில் இருந்த அத்தனை பேரும், புல்தரையில் பணிபுரியும்போது, பரதநாட்டியம் கற்றுக்கொண்ட பெருமை இந்த அட்டைபூச்சிகளையே சாரும். (ஒரு சின்ன சீக்ரெட் : மேலிருக்கும் பர்த்டே ஃபோட்டோவில் நன்றாக உற்று பாருங்கள்.., அனைவரும் பேண்ட்-ஐ முட்டிவரை தூக்கிவிட்டிருப்பதை காணலாம்... எல்லாம் அட்டை பயம்தான்.)

அன்று மூணாறு ஷெட்யூலில் கடைசி நாள்... ஒரு கோல்ஃப் கிரவுண்டில் டூயட் பாடல் எடுத்துக் கொண்டிருந்தோம்... நடன இயக்குனர் திரு. தினா மாஸ்டர் நேர்த்தியாக பாடலை முடித்து கொண்டிருந்தார். ஆனால், வழக்கமாய் மாலை மட்டுமே பெய்யும் மழை அன்று கொஞ்சம் முன்னாலேயே வந்துவிட்டது. மழை நிற்கட்டுமே என்று அனைவரும் ஒரு பெரிய டார்பாலின் விரிப்பிற்குள் கமுக்கமாய் நின்று கொண்டோம். மழை நிற்காமல் வந்து கொண்டேயிருந்தது. நேரம் அதிகமாகவே, ஷூட்டிங் தாமதமாய்க்கொண்டிருப்பதால்... எங்களுக்குள் கலக்கம் கொஞ்சமாய் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. எங்கள் கலக்கத்தை குறைப்பதற்காக, கேமிராமேன் சதீஷ்... தனது அஸிஸ்டென்ட் மொபைலில் 'ஊரவிட்டு ஊருவந்து...' என்ற பாடலை போட்டு, அந்த செல்ஃபோனை மைக்-ல் பிடித்தார். அந்த பாடல் ஸ்பீக்கரில் நல்ல சத்தமாக கேட்க ஆரம்பித்தது. ப்ரொடக்ஷன் டீமில் ஜெகதீஷ் என்ற ஒருவர் திடீரென்று பாடலை கேட்டதும் நடனமாட ஆரம்பித்தார். மழையில் அவர் ஆடிய ஆட்டம்... கதகளியும் குத்தாட்டமும் கலந்து ஒரு புது மாதிரியாக இருந்தது. அனைவரும் அவரை ரசித்து ஆராவாரம் செய்து கொண்டிருந்தனர். பாட்டு முடியவும் மழை நிற்கவும் சரியாக இருந்தது. அன்று மாலைக்குள் பாடல் படப்பிடிப்பும் நல்லபடியாக நடந்து முடிந்தது.

மூணாறு படப்பிடிப்புடன் அவுட்டோர் ஷூட்டிங் மொத்தமும் நல்லபடியாக  நிறைவுபெற்றது. அன்றே யூனிட் அனைத்தையும் பேக்-அப் செய்து அனுப்பிவிட்டு... அடுத்தநாள், எங்கள் முதல் படமான 'ஓர் இரவு'  படப்பிடிப்பு நடத்திய வீட்டை சென்று தரிசித்துவிட்டு வந்தோம்.


'ஓர் இரவு' வீடு...

'ஓர் இரவு' ஷூட்டிங்கின்போது ஏற்பட்ட நண்பர்களில், லொகேஷன் மேனேஜர் திரு.நிக்ஸன் மற்றும், சரவண பவன் ஹோட்டலில் உணவு உபசரிப்பாளர் திரு.அழகர்சாமி ஆகியோரை  சந்தித்தோம். மூணாறில், வியூபாய்ண்ட் என்னும் இடத்திலுள்ள டீகடையில் (நாங்கள் வழக்கமாக டீ அருந்தும் இடத்தில்) ஏலக்காய் வாசனையுடன் டீ குடித்துவிட்டு... கிளம்பினோம்... சென்னைக்கு அல்ல... வரும் வழியில் இன்னொரு இடத்திற்கு செல்ல வேண்டியிருந்தது...

அதை அடுத்த பதிவில் பகிர்கிறேன்...

(தொடரும்)


Signature

Popular Posts